Published : 18 Sep 2020 12:28 PM
Last Updated : 18 Sep 2020 12:28 PM

பாளை. பள்ளி மாணவர் வரைந்த பிரதமரின் 114 உருவப்படங்கள் கண்காட்சி

பாளையங்கோட்டை ஐஐபி லெட்சுமிராமன் மெட்ரிக் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் ஜி. மகாராஜன் வரைந்துள்ள பிரதமர் மோடியின் வெவ்வேறு தோற்றத்திலான 114 உருப்படங்கள், அவரது பிறந்த நாளையொட்டி நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டன.

பாளையங்கோட்டை சீவலப் பேரி சாலையிலுள்ள பாஜக அலுவலகம் அருகே 39 அடி நீளம், 17.5 அடி அகலத்திலான பதாகையில் HAPPY Birthday MODIJI என்ற வடிவத்தில் 114 ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களை பாஜகவினரும், அவ்வழியாக சென்றவர்களும் பார்வையிட்டு, மாணவர் மகாராஜனை பாராட்டினர்.

ரத்ததானம்

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையிலுள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை, திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். திருநெல்வேலி டவுன், பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கொடியேற்று நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் முக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் கொடியேற்றினார்.

தூத்துக்குடி

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சங்கர ராமேஸ்வரர் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில், முத்து விநாயகர் கோயில், சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோயில், பிரையண்ட் நகர் பத்திரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காமராஜ் கல்லூரிக்கு எதிரில் மரக்கன்று நட்டப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளும், பாரதி நகரில் பெண்களுக்கு இலவச சேலைகளும், அடைக்கலா புரத்தில் ஏழைகளுக்கு அரிசி பைகளும், திருசெந்தூர், ஸ்ரீவை குண்டத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளுக்கு மாவட்டத் தலைவர் பி.எம்.பால் ராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வி.எஸ்.ஆர்.பிரபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.இசக்கிமுத்து, வணிகப் பிரிவு மாவட்டச் செயலாளர் கே.பழனிவேல் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x