Published : 18 Sep 2020 07:39 AM
Last Updated : 18 Sep 2020 07:39 AM

ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி செல்லும் வெண்கல மணி: 10 கி.மீ. தூரத்துக்கு ஓசை கேட்கும்

ராமேசுவரத்தில் இருந்து அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு வெண்கல மணி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மணியின் ஓசை, 10 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி ஆக.5-ம் தேதி பூமி பூஜை செய்தார். கோயில் கட்டும் பணிக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சிறப்பு யாகம் நேற்று நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து ராமேசுவரம் மேலத் தெருவில் இருந்து லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா என்ற அமைப்பு சார்பில் தயாரிக்கப்பட்ட 5 அடி உயரம், 613 கிலோ எடை கொண்ட வெண்கல மணியை அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மணியை அயோத்திக்கு கொண்டு செல்லும் வாகனத்தை நயினார் நாகேந்திரன் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த வாகனத்தை லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா அமைப்பின் தேசியச் செயலாளர் ராஜலட்சுமி மந்தா என்பவர் ஓட்டிச் செல்கிறார்.

இந்த வாகனம் புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக உட்பட 10 மாநிலங்கள் வழியாக 4,552 கி.மீ. கடந்து அக்.7-ம் தேதிஅயோத்தி சென்றடையும். இந்தமணியின் ஓசை 10 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x