Published : 18 Sep 2020 07:36 AM
Last Updated : 18 Sep 2020 07:36 AM

144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாதா?- அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி

சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமிழக முதல்வருக்கு பொருந்தாதா என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

5 பேருக்கு மேல் பொது இடத்தில் கூடக் கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு தமக்குப் பொருந்தாது என்ற நினைப்பில் முதல்வர் பழனிசாமி தொடர்ந்து நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது. கரோனா தொற்றின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்வர் பங்கேற்றுள்ளார்.

அரசு விதிகளை முதல்வரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அதிமுக தொண்டர்களைப் பற்றி முதல்வருக்கு அக்கறையில்லாமல் போனாலும், அப்பாவி மக்களுக்கு நோய் பரவுவதற்கு அவரே காரணமாக இருப்பது குற்றமில்லையா? கரோனா பரவலுக்கு பொதுமக்கள்தான் காரணம் எனச் சித்தரிக்கும் முதல்வர், அதற்கு நேர்மாறாக தானே செயல்படுவது எப்படி சரியாக இருக்க முடியும்? என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x