Published : 18 Sep 2020 07:13 AM
Last Updated : 18 Sep 2020 07:13 AM

பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக: ஓபிஎஸ், இபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை

சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், நிர்வாகிகள் நியமனம், சசிகலா விடுதலை, முதல்வர் வேட்பாளர்குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர்இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை அதிமுக ஏற்கெனவே தொடங்கியுள்ளது. நிர்வாக ரீதியாக மாவட்டங்கள் பிரிப்பு, புதிய நிர்வாகிகள் நியமனம், பல்வேறு பிரிவுகளுக்கு உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசின் நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் வகையில் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சீரமைக்கப்பட்டு, நிர்வாகிகள் மற்றும் கீழ்மட்ட பிரதிநிதிகள் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, மேலும் சில மாவட்டங்களை பிரித்து அதற்கான நிர்வாகிகளை நியமிக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் கிளம்பியுள்ள முதல்வர் வேட்பாளர் விவகாரம், திருச்சி அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு இப்போதே தீர்வு கண்டு தேர்தலுக்கு தயாராகவேண்டும் என அதிமுக தலைமைமுடிவெடுத்துள்ளது. கட்சியில் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் சமாதானப்படுத்துவது, அவர்களுக்கான பதவிகளை அளிப்பது ஆகியவற்றையும் தேர்தலுக்கு முன்பே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகள் பேச்சு

இதுதவிர, வரும் ஜனவரியில் சசிகலா விடுதலையாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் தற்போதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது விடுதலைக்குப் பிறகு கட்சிக்குள் பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடாது என்பதிலும் அதிமுக தலைமை உறுதியாக உள்ளது. கூட்டணி குறித்து பாஜக, தேமுதிக நிர்வாகிகள் பேசி வருவதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

நிர்வாகிகளுக்கு அழைப்பு

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில், கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. தற்போது சென்னையில் உள்ள அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கரோனாபாதிப்பு உள்ளதால் அனைத்துநிர்வாகிகளும் வெளிமாவட்டங்களில் இருந்து வரத் தேவையில்லை என்று தலைமை கூறியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள், சசிகலா விடுதலை, நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்வை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x