Last Updated : 17 Sep, 2020 07:06 PM

 

Published : 17 Sep 2020 07:06 PM
Last Updated : 17 Sep 2020 07:06 PM

வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்க்கல்விக்கு உதவிய காரைக்குடி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 

காரைக்குடியில் கரோனாவால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உயர்க்கல்விக்கு உதவிய மருத்துவர்கள் ரமேஷ், கவிதாவுடன் மாணவர்கள்

காரைக்குடி

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்க்கல்விக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உதவியுள்ளனர்.

கரோனா பாதிப்பு தொடர்வதால், பலரும் வாழ்வாதாரத்தை தொலைத்து உணவிற்கே சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்க்கல்வியைத் தொடர முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு காரைக்குடி கவிதா மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் ரமேஷ், அவரது மனைவி கவிதா உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

மேலும் அவர்கள் உயர்க்கல்வி படிக்க முடியாத மாணவர்களை கண்டறிந்து உதவுவதற்காக ஆரஞ்ச் ட்ரீ எஜூகேஷனல் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தை 2016-ம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனம் மூலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், சான்றிதழ் படிப்புகளில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. அடுத்ததாக முதல் தலைமுறை பட்டதாரி, ராணுவ வீரர்களின் குழந்தைகள், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 52 மாணவர்களுக்கு ரூ.8 லட்சம் அளவிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்தாண்டு கரோனா ஊரடங்கால் பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதனால் விண்ணப்பித்த 96 மாணவர்களையும் தேர்வு செய்து ரூ.13 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் ரமேஷ், கவிதா ஆகியோர் கூறும்போது, ‘‘ஒரு நாள் உதவி என்றில்லாமல் வாழ்நாள் முழுமைக்கும் அந்த உதவி பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கல்வி உதவித் தொகையை வழங்குகிறோம். உதவித் தொகையானது அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

அரசுக் கல்லூரி மட்டுமன்றி தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கி வருகிறோம். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பட்டப்படிப்பை முடிக்கும் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக தனியாக இணையதளம் தொடங்கி ஜூலை முதல் ஆகஸ்ட் வரை விண்ணப்பங்களைப் பெறுகிறோம்.

அடுத்த கட்டமாக கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த சாலையோர வியாபாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளோம்" என்றனர் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x