Published : 17 Sep 2020 05:34 PM
Last Updated : 17 Sep 2020 05:34 PM

மகாளய அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் வெறிச்சோடிய ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல்

ராமேசுவரம்

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளதால் மகாளய அமாவாசை தினமான இன்று (வியாழக்கிழமை) தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.

சூரியனும் சந்திரனும் சேரும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும். முன்னோர்களுக்கு அமாவாசை தினதன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களுக்கு உணவும் நீரும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தை பூர்த்தி செய்ய இந்துக்கள் தை, மாசி, ஆடி, மற்றும் மகளாளய அமாவாசைகளில் நீர் நிலைகளில் நிறைவேற்றுவார்கள்.

ராமேசுவரத்தில் மகாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் மகாளய அமாவாசை அன்று ராமேசுவரத்தில் குவிவர்.

கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்கவும், புனித நீராடவும் காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனால் மகாளய அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் ராமேசுவரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும் இது போல ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி சேதுக்கரை கடற்கரை, தேவிப்பட்டிணம் நவபாசனம் கடற்கரை, மாரியூர் கடற்கரை ஆகிய இடங்களிலும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்யவும், புனித நீராடவும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x