புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் உள்ஒதுக்கீடு தர வலியுறுத்தல்; சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா

அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா
அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா
Updated on
1 min read

மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு உள் இடஒதுக்கீடு வழங்கியதை போன்று புதுச்சேரியிலும் வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (செப். 17) சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் அசனா, கொறடா வையாபுரி மணிகண்டன் ஆகியோர் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அன்பழகன் கூறுகையில், "மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக ஏழை, எளிய, நடுத்தர மாணவ, மாணவிகள் நலனுக்காக அரசுப் பள்ளியில் படிக்கும் அரசின் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி அதற்கான சட்டத்தையும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி நிறுவனங்களின் அரசின் இட ஒதுக்கீடாக உள்ள சுமார் 350 இடங்களில் தமிழகம் போன்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் 26 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு அளிக்கலாம். அரசுப்பள்ளி மாணவர்கள் நலனுக்காக பல ஆண்டுகாலம் தொடர்ந்து உள் ஒதுக்கீடு வழங்க அதிமுக வலியுறுத்தியபோதும் ஆளும் காங்கிரஸ் அரசானது தனியார் பள்ளி உரிமையாளர்களின் நலனுக்காக இதில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

புதுச்சேரியில் ஆளும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும் அரசுப்பள்ளியில் தமிழகம் போன்று மருத்துவக் கல்வியில் உரிய உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் வேறு வழியில்லாமல் சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in