Last Updated : 17 Sep, 2020 01:58 PM

 

Published : 17 Sep 2020 01:58 PM
Last Updated : 17 Sep 2020 01:58 PM

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு; தமிழக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி இன்று (செப். 17) புதுச்சேரி சாரத்தில் உள்ள அவரது சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவிக்க வேண்டும். பெரியார் பிறந்த நாளில் மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்துப் போராட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அகில இந்திய அளவில் சனாதன சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தை அடியோடு மாற்ற வேண்டும் என்றும் துடிக்கிற அவர்களின் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பெரியாரின் தேவையானது அகில இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிகிறது.

மோடி அரசு கரோனா நெருக்கடியில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவைத் தவறான அணுகுமுறைகளின் மூலம் ஏற்படுத்தி இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. எனவே, பழைய வரி விதிப்பு நடைமுறையை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் ஏற்பட்ட இழப்பீட்டை மோடி அரசு வழங்கவில்லை. அதிலும், குறிப்பாக, தமிழகம், புதுச்சேரிக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதியை வழங்காமல் ஏய்த்து வருகிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குக் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதியை உடனே வழங்க வேண்டும்.

நீட் தேர்வு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களின் உயிரைப் பறிக்கிறது. தேர்வுக்கு முன்பு பலர் தமிழ்நாட்டில் உயிரிழந்ததை நாம் அனைவரும் அறிவோம். தேர்வு முடிவுகள் வரும்போது எத்தனை பேரின் உயிரைப் பறிக்கும் என்று அச்சமாக இருக்கிறது. எனவே, தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அகில இந்திய அளவில் நீட் தேர்வைக் கைவிட வேண்டும்.

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது. அதனைப் புதுச்சேரி அரசும் பின்பற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x