

மரம் வளர்ப்புப் பணிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமியின் நினைவு தினத்தை (செப்.16) முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 1.26 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை காவிரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது.
அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் உள்ள ராஜேஷின் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் 4,000 மரக் கன்றுகளும், கருமத்தம்பட்டியை அடுத்த முதலிபாளையம் கிராமத்தில் உள்ள சிரஞ்சீவி என்பவரின் 3 ஏக்கர் நிலத்தில் 1,200 மரக் கன்றுகளும், திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் அருகே எள்ளபாளையம் கிராமத்தில் உள்ள கலைவாணனின் 5 ஏக்கர் நிலத்தில் 2,000 மரக்கன்றுகளும் நடப்பட்டன. விவசாயிகளின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு செம்மரம், சந்தனம், ரோஸ்வுட், வேங்கை போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்பட்டன.