Published : 17 Sep 2020 07:30 AM
Last Updated : 17 Sep 2020 07:30 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே மகனின் பிறந்த நாள் விழாவில் பாஜக இளைஞரணி பிரமுகர் கொலை

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் குந்துமாரணப்பள்ளி கிராமத்தில், ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவரை வெட்டிப் படுகொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் குந்துமாரணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (35). இவர் பாஜக கெலமங்கலம் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு கீதா(25) என்ற மனைவியும், ரிஷிகேஷ்(3), தனஞ்செயன்(1) ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.

ரங்கநாதனுக்கும் போத்தசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரங்கநாதன், வீட்டில் தனது இளையமகன் தனஞ்செயன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது அவரது வீட்டுக்குள்புகுந்த மர்ம கும்பல், ரங்கநாதனிடம் தகராறில் ஈடுபட்டு, உருட்டுக்கட்டைகளால் தாக்கி, அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். ரங்கநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கெலமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

போலீஸார், ரங்கநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தைக் கண்டித்து குந்துமாரணப்பள்ளி செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் உறுதியை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது.கெலமங்கலத்தில் மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் கூறும்போது, ‘‘குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x