Published : 16 Sep 2020 08:49 PM
Last Updated : 16 Sep 2020 08:49 PM

செப்.21- 25 முதல் 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் நிறுத்திவைப்பு: பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை

செப்.21 முதல் 25 வரை அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தாமல் 5 நாட்கள் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதை உறுதிப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், 21 முதல் 25 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணையாக அது வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட்- 19 பெருநோய்த் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 2020 முதல் இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இணையவழிக்கல்விக்கான வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப்பள்ளிகளும் அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி இணையவழி வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் , பள்ளிகளில் நடத்தப்பெறும் இணையவழி வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைத்துப்பள்ளிகளும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இணையவழி வகுப்புகளில் வருகை, மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு நோக்கங்களுக்காக கட்டாயமாக கணக்கிடப்படக்கூடாது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது இணையவழி வகுப்புகளுக்கு வருகை புரியாத மாணவர்களும், இணையவழி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி பெறுவதற்காக ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ப கூடுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும்,

ஆன்லைன் முறைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் மூலம் குழந்தைகளுக்கு தொலைவிலிருந்து அனுப்பப்படும் பாடம் சார்ந்த பணிகள் மற்றும் மதிப்பீடுகள் ஏதும் மாணவர்களின் இறுதித்தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்க கட்டாயாமாகக் கணக்கிடப்படக்கூடாது.

ஆண்டுதோறும், செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும். இணையவழி வகுப்புகள் நடைபெறும் தற்போதைய சூழ்நிலையில், செப். 21 முதல் 25 வரை ஐந்து நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறையினை அறிவிக்க அரசு உத்தேசித்துள்ளது என அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் செப். 21 ந் தேதி முதல் 25 வரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணையவழி வகுப்புகள் நடைபெறாது என அரசாணையாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
செப்டம்பர் 21 முதல் 25 வரை இணைய வழி வகுப்புகள் நடைபெறாது என அமைச்சர் அறிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

அதன்படி 2020- 21 ஆம் கல்வியாண்டில் செப்டம்பர் 21 முதல் 25 வரை ஐந்து நாட்களுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும் இணைய வழி வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி வைக்கலாம் என்றும் இதுதொடர்பாக உரிய ஆணை வழங்குமாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இயக்குனரின் கருத்துருவை ஏற்று 2020-21 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் செப்.21 முதல் செப். 25 வரை ஐந்து நாட்களுக்கு இணைய வழி வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி வைத்து அரசு ஆணையிடுகிறது”.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x