ஆங்கில வழிக் கல்வி தொடங்க நிபந்தனையால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு

ஆங்கில வழிக் கல்வி தொடங்க நிபந்தனையால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தபோதிலும், ஆங்கில வழிக் கல்வி தொடங்க நிபந்தனையால் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரிந்துள்ளது.

ஆங்கில மோகத்தாலும், தனியார் பள்ளி கட்டமைப்பு வசதிகளாலும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது. இதையடுத்து எந்தவித நிபந்தனையுமின்றி அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க அரசு அனுமதி அளித்தது.

ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க தனியாக கட்டிட வசதிகள் இருக்க வேண்டுமென அரசு நிபந்தனை விதித்தது.

இதனால் நிதி ஆதாரம் உள்ள சில பள்ளிகள் மட்டுமே ஆங்கில வழிக் கல்வியை தொடங்கின. பெரும்பாலான பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். வருவாய் குறைவால் பலருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து வருகின்றனர். இதனால் இந்தாண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

ஆனால் ஆங்கில வழிக் கல்வி தொடங்க முடியாத அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரிந்துள்ளது. சில பள்ளிகள் ஏற்கெனவே இருந்த மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைக்கவே தடுமாறி வருகின்றன.

இதனால் அரசுப் பள்ளிகளைப் போன்று தங்களுக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி ஆங்கிலவழிக் கல்வியை தொடங்க அரசு அனுமதிக்க வேண்டுமென, உதவி பெறும் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in