

தென்காசி மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை கோரி மேலும் ஒருவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தென்காசியை சேர்ந்த ராம உதயசூரியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்துக்கு மேலகரத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கு முத்தையா பிள்ளை என்பவர் தானமாக வழங்கிய இடம் ஆட்சியர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட முதலில் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் ஈரப்பதம் மிகுதியாக இருப்பதால் இந்த இடம் கட்டிடம் கட்டுவதற்கு தகுதியற்றது என்று கூறி அந்த முடிவை அதிகாரிகள் கைவிட்டனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டிடம் கட்டினால் கட்டிடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்படும். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும். எனவே இந்த இடத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுவுடன் விசாரணைக்குபட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை அக். 18- ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.