Published : 16 Sep 2020 04:31 PM
Last Updated : 16 Sep 2020 04:31 PM

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கு: ஆளுநரின் செயலாளர், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் செயலாளரும், தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமையாக்கி மே 22 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் தனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சகோதரி தீபாவுடன் வேதா நிலையத்தில் சிறு வயதில் வளர்ந்ததாகவும், பாட்டி சந்தியா மரணத்துக்குப் பின் வேதா நிலையத்தில் வசித்து வந்த தன் அத்தை ஜெயலலிதா, பல்வேறு முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளை அங்கு நடத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஜெயலலிதா இறந்த பின்னர், தங்களை வாரிசுகளாக அறிவிக்கக் கோரி தானும், தன் சகோதரி தீபாவும் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வேதா நிலையத்தையும், அங்கு உள்ள அசையும் சொத்துகளையும் அரசுடமையாக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை எனவும், ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் குறித்த உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளாமல் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், நினைவில்லமாக மாற்றத் தடை விதிக்க வேண்டும் எனவும் தீபக் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (செப். 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், அவசரச் சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு குறித்து, ஆளுநரின் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை செயலாளர் மற்றும் இயக்குநர், தமிழக சட்டத்துறை செயலாளர் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x