எஸ்.வி.சேகருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்: காவல்துறை விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக நிபந்தனை
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்ட காணொலியில், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், தேசியக் கொடியில் அந்த நிறத்தைக் கிழித்துவிட்டு சுதந்திர தினக் கொடியை ஏற்றப்போகிறாரா? எனப் பேசியிருந்தார். மேலும் தேசியக்கொடியின் மூவர்ணமான தியாகம், தூய்மை, பசுமை குறித்துப் புதிய விளக்கமும் கொடுத்திருந்தார்.
தேசியக்கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்ட எஸ்.வி சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேசியக்கொடி அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யக் கூடும் என அஞ்சிய எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைது செய்ய மாட்டோம் எனக் காவல்துறை தெரிவித்திருந்தது. தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுவதும் இனி ஒருபோதும் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என உத்தரவாத மனுவை எஸ்.வி.சேகர் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தெரிவித்த வருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை கைது செய்யக்கூடாது என்ற உத்தரவையும் நீதிபதி நீட்டித்தார்.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தேவைப்படும்போது காவல்துறையின் விசாரணைக்குத் தவறாமல் ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
