அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அரியர் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரிய முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கலை- அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளில் அரியர் மாணவர்களுக்கும் தேர்வுகளின்றித் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றைக் காப்பதற்காக வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், அனைத்துப் பாடங்களிலும் படித்துத் தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடையச் செய்யும் எனவும் பாலகுருசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தைத் தாழ்த்தும் வகையில் அரசின் முடிவு உள்ளதாகவும், 25% மதிப்பெண்களுக்குக் கீழ்வாங்கி தோல்வி அடைந்தவர்களும், 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்களையும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் மேலும் குறையும் நிலை உருவாகி உள்ளதாகவும் பாலகுருசாமி குறிப்பிட்டுள்ளார்.

தேர்வுகளில் பங்கேற்றால்தான் மாணவர்களுக்கு நம்பிக்கையும், மனத் திருப்தியும் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான மாணவர்களுடன் போட்டியிடக்கூடிய திறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவர்களிடம் பிரதிபலிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்தது தவறு என பாலகுருசாமி குறிப்பிட்டுள்ளார்.

அரசின் முடிவைக் கைவிடக்கோரி ஆகஸ்ட் 28 ஆம் தேதி மனு அளித்தும் பலனில்லாததால், உடனடியாக அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (செப். 16) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாலகுருசாமி வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதே கோரிக்கையுடன் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்குடன் இணைத்துப் பட்டியலிடவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in