Published : 16 Sep 2020 07:51 AM
Last Updated : 16 Sep 2020 07:51 AM

80 வயது கணவர் இறந்ததால் 48 வயது மகளுடன் குளத்தில் குதித்து தாய் தற்கொலை: மற்றொரு மகளுக்கு நாகர்கோவிலில் தீவிர சிகிச்சை

நாகர்கோவில்

குடும்பத்தை கூலி வேலை செய்து காப்பாற்றிய 80 வயது முதியவர் இறந்ததால், அவரது மனைவியும், 2 மகள்களும் குளத்தில் குதித்தனர். இதில் இருவர் இறந்த நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

நாகர்கோவில் அருகே சுசீந்திரம் செல்லும் வழியில் உள்ள நயினார் குளத்தில் நேற்று காலை 3 பெண்கள் தண்ணீரில் மிதந்தபடி கிடந்தனர். அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஒருவரையொருவர் கயிற்றால் கைகளை கட்டிய நிலையில் தண்ணீரில் மிதந்த 3 பேரையும் போலீஸார் மீட்டு கரைசேர்த்தனர். அவர்களில் இரு பெண்கள் இறந்து விட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் உடனடி சிகிச்சையால் உயிர்தப்பிய அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் தனது பெயர் சச்சு(40) என்றும், வறுமையால் குடும்பத்துடன் தற்கொலை முடிவை எடுத்த அதிர்ச்சி தகவலை கூறினார்.

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (80). இவரது மனைவி பங்கஜம் (71), மகள்கள் மாலா (48), சச்சு (40). தனது வயதான காலத்திலும் வடிவேல் முருகன் கூலி வேலை செய்துவந்தார். அதில் கிடைத்த சொற்ப பணத்திலேயே குடும்பத்தினர் 4 பேரும் வாழ்ந்து வந்துள்ளனர். வறுமையால் 2 மகள்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அத்துடன் அவர்கள் வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக கரோனா ஊரடங்கால் வேலைகிடைக்காமல் வருமானமின்றி வடிவேல் முருகன் தவித்து வந்துள்ளார். ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் மூலம் பசியைப் போக்கி வந்துள்ளனர். இதற்கிடையே, கீழே விழுந்து காயமடைந்த வடிவேல் முருகன் வீட்டில் படுக்கையிலேயே இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் இறந்துபோனார்.

வெளியுலகமே தெரியாத அவரது மனைவியும், மகள்களும் அதிர்ச்சியடைந்தனர். தாங்கள் அனாதையானதாக நினைத்து மனவேதனை அடைந்த 3 பேரும் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவெடுத்தனர்.

வடிவேல் முருகனின் உடலை அடக்கம் செய்யக்கூட வழியில்லாத நிலையில், கட்டிலிலேயே அவரது உடலை வைத்துவிட்டு, பங்கஜம், அவரது மகள்கள் மாலா, சச்சு ஆகிய 3 பேரும் நள்ளிரவில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றனர்.

நள்ளிரவில் நடந்தே 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றுள்ளனர். சுசீந்திரம் அருகே நல்லூர் நயினார் குளப்பகுதியை அடைந்ததும், அங்கு 3 பேரும் தங்கள் கைகளை கயிற்றால் இணைத்து கட்டிக் கொண்டு குளத்தில் குதித்துள்ளனர். இதில் பங்கஜமும், மாலாவும் உயிரிழந்துள்ளனர். உயிர்தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சச்சு, இத்தகவலை தேம்பித்தேம்பி அழுதபடி போலீஸாரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு கட்டிலில் வடிவேல்முருகன் இறந்துகிடந்தார். அவரது உடலை மருத்துவப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்குடும்பத்தினர் 4 பேருமே மிக மெலிந்த தேகத்துடன் இருந்கது, அவர்களின் வறுமை நிலையைகாட்டியது. இச்சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x