Published : 15 Sep 2020 06:04 PM
Last Updated : 15 Sep 2020 06:04 PM

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு; பேரவையில் மசோதாவைத் தாக்கல் செய்தார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 15) சட்டப்பேரவையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து, உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின்னர் ஆற்றிய பதிலுரை:

"தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான இட ஒதுக்கீட்டு முறையினைக் கொண்டுவருதல் குறித்த சட்டம் நிறைவேற்றப்படும் என நான் அறிவித்ததற்கிணங்க தற்போது இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக என்னுடைய கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

1993 ஆம் ஆண்டு 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், உரிய சட்டத்தினை இயற்றி, அரசியலமைப்புச் சட்ட 9-வது விவர அட்டவணையில் சேர்த்து, அதற்கு அரசியலமைப்புச் சட்டம் 31(பி)-ன்கீழ் பாதுகாப்பினையும் பெற்றுத் தந்தவர், சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதாதான். அவரால்தான் தமிழ்நாட்டில் தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு சாத்தியமாகி உள்ளது.

தமிழக அரசு, அரசுப் பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை ஆகியவற்றுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியைக் காப்பதுடன், பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனைக் காப்பதிலும் முன்னோடி அரசாக உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர்.

2006-2007 ஆம் ஆண்டிலிருந்து 2010-2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆட்சியின்போது புதிதாக 300 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ஜெயலலிதாவும், அதனைத் தொடர்ந்து தமிழக அரசும், 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பித்ததன் மூலம், புதியதாக 700 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை உருவாக்கியும், 9 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 700 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை அதிகரித்தும், ஆக மொத்தம் 1,400 புதிய மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை கடந்த 9 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளது. 2010-2011 இல் 1,945 ஆக இருந்த மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள், தற்போது 3,345 ஆக உயர்ந்துள்ளன.

இதைத் தொடர்ந்து, அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும் விதமாக, தமிழக அரசு, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் வரும் ஆண்டுகளில் கூடுதலாக 1,650 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவும், அவரைத் தொடர்ந்து தமிழக அரசும், ஏழை, எளிய மாணவர்கள், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வதற்குத் தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தமிழக அரசு நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று கொள்கை அளவிலும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது.

தமிழக அரசு, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தினை தொடர்ந்து நடத்தும் என்பதைப் பேரவையில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் 21.3.2020 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன். இது சம்பந்தப்பட்ட அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உரிய பரிந்துரையையும் தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசனின் தலைமையின் கீழ் 21.3.2020 அன்றே ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.

அவ்வாணையம் கடந்த 8.6.2020 அன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதும், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டு தேர்வில் வகைப்படுத்துவது சமநீதிக்கு முரணானது என்றும், அதனால் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதே சமநீதியை நிலைநாட்ட வகை செய்யும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்தது.

மேலும், அரசுப் பள்ளிகளில் பயின்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு, அனைத்து இளநிலை மருத்துவப் பிரிவுகளிலும் உள் இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக ஒரு சிறப்புச் சட்டம் இயற்றிட அவ்வாணையம் பரிந்துரைத்தது.

கடந்த 15.6.2020 மற்றும் 14.7.2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், ஆணையத்தின் பரிந்துரை விவாதிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டு முதல், மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க தமிழக அரசு முடிவு செய்து, அதையே சட்டமாக்க இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட முன்வடிவினை அறிமுகம் செய்து, ஆய்வு நிலையில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 7,968 மேல்நிலைப் பள்ளிகளில், 3,054 பள்ளிகள், தமிழ்நாடு அரசின் சார்பில், நடத்தப்பட்டு வருகின்றன. இது 38.32 சதவீதமாகும். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பயிலும் 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 மாணவர்களில், 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இது 41 சதவீதமாகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களில் 0.15 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைக்கின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே, இவர்களைச் சமநிலையில் வைத்துப் பார்ப்பது சமநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை. எனவேதான், தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தனியாக உள் ஒதுக்கீடு அவசியமாகிறது என்பதை இத்தருணத்தில் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

தற்போதுள்ள மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களில், இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300-க்கு மேல் இடங்கள் ஏழை, எளிய மாணவர்களுக்கு இதன் மூலம் சம நீதி வழங்க இது வழிவகுக்கும்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணாக்கர்கள், அதாவது ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உட்பட / நகராட்சி / மாநகராட்சி /ஆதி திராவிடர் நலன் / பழங்குடியினர் நலன் / பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, கள்ளர் சீர்மரபினர் / மாற்றுத்திறனாளிகள் நலன் / வனம் / சமூக பாதுகாப்பு (சிறார் சீர்திருத்தப் பள்ளிகள்) ஆகிய துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் மற்றும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் கீழ் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று, பின்னர் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு,

மருத்துவம், பல் மருத்துவ மற்றும் இந்திய மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கையின் போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கவும்,

மேற்படி இடஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும்,

மேலும், மேற்படி இட ஒதுக்கீட்டு முறையினை, அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் பின்பற்றும் வகையிலான முறையில் இச்சட்ட முன்வடிவு வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட முன்வடிவை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

இதையடுத்து இந்தச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x