அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு: கோவில்பட்டியில் மதிமுகவினர் சாலை மறியல்

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு: கோவில்பட்டியில் மதிமுகவினர் சாலை மறியல்
Updated on
1 min read

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மதிமுகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சிலை முன்பு அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துக்கு மதிமுக வடக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகில், அரசு தலைமை மருத்துவமனை எதிர் புறம் உள்ளிட்ட இடங்களில் மதிமுக கட்சி கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக மதிமுகவினர் வந்தனர்.

அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க மதிமுகவினருக்கு அனுமதி மறுத்ததை அடுத்து அண்ணா சிலை முன்பு மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலர் பால்ராஜ் மற்றும் மதிமுக நிர்வாகிகள் பொன் ஸ்ரீ ராம், ராமச்சந்திரன், சரவணன், எல்.எஸ்.கணேசன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் மற்றும் போலீஸார் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கட்சியினர் கலைந்து சென்றனர் .இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in