Published : 15 Sep 2020 11:34 AM
Last Updated : 15 Sep 2020 11:34 AM

மேலப்பாளையம் உழவர் சந்தை இயங்குமா? - காய்கறிகளுடன் வந்து வியாபாரிகள் வலியுறுத்தல்

மேலப்பாளையம் உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மனு அளித்தனர்.

அக் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.காஜா இஸ்மாயில் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:

மேலப்பாளையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கடைகளும், வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. அதுபோல் மேலப்பாளையம் உழவர் சந்தையை திறந்து, அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரசிங்கநல்லூர்

பேட்டை நரசிங்கநல்லூர் சத்யாநகரைச் சேர்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: நரசிங்கநல்லூர் சத்யாநகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம்இலவச பட்டா பெறப்பட்டு 3 மாதம்ஆகிறது. ஆனால் இதுவரை நிலஅளவை செய்து தரப்படவில்லை. நிலஅளவை செய்து தருவதற்கு பணம் கேட்கிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நில அளவை செய்துதரவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசநோய் பணியாளர் சங்கம்

திருநெல்வேலி மாவட்ட காசநோய் பணியாளர் நலச்சங்கத்தினர் அளித்த மனு விவரம்: காசநோய் துறையில் தமிழக அளவில் 1,600-க்கும் மேற்பட்ட பணியாளர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 75 பேரும் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவரும் காசநோயாளிகளின் வீட்டுக்கே சென்று நேரடியாக மருந்து வழங்கி வருகின்றனர்.

கரோனா காலத்திலும் பணியாளர்களின் சேவை தொடர்கிறது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதிக்குபின் அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்கள் நியமனம் நடைபெறுகிறது. இந்த நியமனத்தை கைவிட வேண்டும். ஏற்கெனவே உள்ள பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஜன பொதுநலச்சங்கம்

திருநெல்வேலி மாவட்ட பொதுஜன பொதுநலச்சங்க தலைவர் எம்.முஹம்மது அய்யூப் அளித்த மனு விவரம்: திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபத்தில் வாகனங்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. டவுனிலிருந்து புதுப்பேட்டை, பழைய பேட்டை மார்க்கமாக செல்லும் வாகனங்களும், பேட்டை மார்க்கமாக டவுனுக்கு வரக்கூடிய வாகனங்களும் இங்குள்ள காட்சி மண்டபத்தை கடந்துதான் பயணிக்க வேண்டியிருக்கிறது.

காட்சி மண்டபத்தின் மையப்பகுதி அடைத்து வைக்கப்பட்டிருப்பதால், இருபுறத்திலும் வாகனங்கள் செல்ல வேண்டியிருக்கிறது. அப்பகுதிகள் பெருமளவு சேதமடைந்து, பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் வாகனங்கள் சிரமத்துடன் கடக்க வேண்டியிருக்கிறது. இச்சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x