Published : 14 Sep 2020 07:32 PM
Last Updated : 14 Sep 2020 07:32 PM

மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு; காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தி, தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக் கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், காலியிடங்களுக்குத் தனியாக கலந்தாய்வு நடத்த இயலாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தகுதியான மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 18-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x