

ஆந்திரக் கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“ஆந்திரக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது. இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
திருத்தணி 9 செ.மீ., சின்னக்கல்லாறு (கோவை ), திருப்பத்தூர் தலா 7 செ.மீ., வால்பாறை (கோவை), திருவாலங்காடு (திருவள்ளூர் ) தலா 5 செ.மீ., மேட்டூர் (சேலம் ), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) தலா 4 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
செப்டம்பர் 14-ம் தேதி அன்று ஆந்திரக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 18-ம் தேதி அன்று மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர் அலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப் 15 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.