Last Updated : 14 Sep, 2020 02:02 PM

 

Published : 14 Sep 2020 02:02 PM
Last Updated : 14 Sep 2020 02:02 PM

அரசு போக்குவரத்து கழகத்தில் 6220 ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் தாமதம்: பேரவையில் குரல் கொடுக்க மு.க.ஸ்டாலினுக்கு பணியாளர் சம்மேளனம் கடிதம்

மதுரை

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் குரல் எழுப்ப வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலர் எஸ்.சந்தானம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஏப் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஓய்வு பெற்றவர்களின் பணி முடிவு பயன்கள் இன்னும் தீர்வு செய்யப்படாமல் உள்ளது. பணிமுடிவு பயன்களுக்காக சுமார் 6220 தொழிலாளர்கள் காத்திருப்பில் உள்ளனர். அவர்களில் எந்தத் தொகையும் பெறாமல் தனது சமூக கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தில் சுமார் 600 பேர் உடல் நலிவடைந்து இறந்துள்ளனர்.

ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2016 முதல் இப்போது வரை அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தாமதமாக ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இடைப்பட்ட காலத்துக்கான ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. சம்பள ஒப்பந்தம் மற்றும் 7-வது சம்பள கமிஷன் உயர்வுகள் ஓய்வூதியர்களுக்கு இதுவரை அமல்படுத்தப்படவில்லை. கடுமையான நோய் தொற்று காலத்தில் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்படவில்லை.

ஓய்வூதியர்கள் பணப்பலன்களுக்காக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிய போதிலும், பணப்பலன்கள் ஆண்டுகணக்கில் வழங்கப்படாமலேயே உள்ளது. இது குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு கூடவுள்ள தமிழக சட்டப்பேரைவைக் கூட்டத்தில் குரல் கொடுத்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு விரைவில் பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x