Published : 14 Sep 2020 11:57 AM
Last Updated : 14 Sep 2020 11:57 AM

மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ஒருசில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 12 மி.மீ., குண்டாறு அணையில் 5 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை, பாவூர்சத்திரம் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது.

அடவிநயினார் அணைக்கு மட்டும் நீர் வரத்து சற்று அதிகரித்தது. கடனாநதி அணை நீர்மட்டம் 73.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 73.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.50 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 34.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 127.75 அடியாகவும் இருந்தது.

தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், குற்றாலத்தில் கடை நடத்தும் வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும் கடும் பொருளாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோதிலும் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடிக்கிறது. இதனால் அருவிப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் கூட அருவிகளில் குளிக்க முடியாததால் ஏக்கத்தில் உள்ளனர்.

தடையை நீக்கி, கட்டுப்பாடு களுடன் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும் தொடர் ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x