Last Updated : 14 Sep, 2020 07:41 AM

 

Published : 14 Sep 2020 07:41 AM
Last Updated : 14 Sep 2020 07:41 AM

பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 886 வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்: நிலுவையில் உள்ளவர்களுக்கும் கடன் வழங்க உத்தரவு

சென்னை

மத்திய அரசின் பிரதமர் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர் கடன் திட்டத்தின்கீழ், தொழில் முதலீட்டுக்காக தமிழகத்தில் இதுவரை 886 நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ளவர்களுக்கும் உடனடியாக கடன் வழங்கவங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் நகர்ப்புறங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு‘பிரதமர் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர்’ என்ற கடன் நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் இதுவரை 886 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு, ‘பிரதமர் நடைபாதை வியாபாரிகள் ஆத்மநிர்பர்’ என்ற கடன் நிதி திட்டத்தை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இக்கடன் திட்டம் வரும் 2022-ம்ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.

இத்திட்டத்தின்படி, நடைபாதைவியாபாரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் முதலீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும். எவ்வித பிணையும் இன்றி வழங்கப்படும் இக்கடன் தொகைக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. அத்துடன், முதல் தடவையாக பெறும் கடனை குறித்தகாலத்துக்குள் திருப்பிச் செலுத்தினால், அடுத்த முறை கூடுதல் தொகை கடனாக கிடைக்கும். அத்துடன், மாதம்தோறும் கடன் தவணையை மின்னணு முறையில் செலுத்தினால் அதற்கு கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

இக்கடன் தொகையை பெற விரும்பும் நடைபாதை வியாபாரிகள், கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த மார்ச் 24-ம் தேதிக்கு முன்பாக வியாபாரத்தை தொடங்கியிருக்க வேண்டும். இக்கடன் திட்டத்தின் கீழ், 50 லட்சம் நடைபாதை வியாரிகளுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இக்கடன் தொகையை பெற இதுவரை 14,563 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. அதில், 886 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 13,677 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அவர்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

வங்கிகளை அணுகலாம்

எனவே, கடன் பெற விரும்பும் நடைபாதை வியாபாரிகள் உடனடியாக அருகில் உள்ள வங்கிக் கிளைகளை அணுகி கடன் பெற்று தங்கள் வியாபாரத்தை முடங்காமல் தொடர்ந்து மேற்கொள்ளலாம். இந்த வாய்ப்பை வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x