Published : 14 Sep 2020 07:14 AM
Last Updated : 14 Sep 2020 07:14 AM
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகவடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும்அதை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிநிலவி வந்தது. இது தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி இது நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
நீலகிரி, வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடியகனமழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள வடதமிழகம் மற்றும் ஆந்திர கடலோரபகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே அப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT