Last Updated : 13 Sep, 2020 12:13 PM

 

Published : 13 Sep 2020 12:13 PM
Last Updated : 13 Sep 2020 12:13 PM

புதுச்சேரியில் ஒரே நாளில் 15 பேர் கரோனாவுக்கு உயிரிழப்பு; புதிதாக 388 பேர் பாதிப்பு; இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக உயர்வு

புதுச்சேரியில் அதிகபட்சமாக 4,024 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 388 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 13) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 4,024 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 291, காரைக்காலில் 58, ஏனாமில் 38, மாஹே 1 என மொத்தம் 388 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி சஞ்சய் காந்தி நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்த 49 வயது பெண், நெட்டப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த 76 வயது மூதாட்டி, பூமியான்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த 83 வயது மூதாட்டி, புது சாரம் வடக்கு வீதியை சேர்ந்த 52 வயது ஆண், அரியாங்குப்பம் சுப்ராயப்பிள்ளை வீதியை சேர்ந்த 64 வயது முதியவர் ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தனர்.

அரியாங்குப்பம் கலாம் தோட்டம் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண், மடுகரையை சேர்ந்த 48 வயது பெண், ரெயின்போ நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த 81 வயது முதியவர், சாரம் தென்றல் நகரை சேர்ந்த 70 வயது முதியவர், ரெட்டியார் பாளையம் சிவகாமி நகரை சேர்ந்த 67 வயது முதியவர் ஆகியோர் ஜிப்மரில் உயிரிழந்தனர்.

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 54 வயது பெண், முத்திரையர்பாளையம் இளங்கோவடிகள் வீதியை சே்ாந்த 73 வயது முதியவர் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், லாஸ்பேட்டை மகாவீர் நகரை சேர்ந்த 64 வயது மூதாட்டி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர், முத்தியால்பேட்டையை சேர்ந்த 85 முதியவர் ஆகியோர் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.94 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 19 ஆயிரத்து 821 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தற்போது புதுச்சேரியில் 2,805 பேர், காரைக்காலில் 240 பேர், ஏனாமில் 106, மாஹேவில் 9 பேர் என 3,160 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,403 பேர், காரைக்காலில் 85 பேர், ஏனாமில் 188 பேர், மாஹேவில் 20 பேர் என மொத்தம் 1,696 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 280 பேர், காரைக்காலில் 23 பேர், ஏனாமில் 32 பேர், மாஹேவில் 7 பேர் என மொத்தம் 342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை நிலையில் 14 ஆயிரத்து 580 (73.56 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 99 ஆயிரத்து 480 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 77 ஆயிரத்து 60 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x