3 மாதங்களில் 2ஜி வழக்கில் தீர்ப்பு: ஹெச்.ராஜா நம்பிக்கை

3 மாதங்களில் 2ஜி வழக்கில் தீர்ப்பு: ஹெச்.ராஜா நம்பிக்கை

Published on

2ஜி வழக்கில் இன்னும் 3 மாதங்களில் தீர்ப்பு வரவுள்ளது. அப்போது, அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:

உலகில் இதுவரை கரோனாவுக்கு பிரத்யேகமான தடுப்பு மருந்துகள் இல்லை. ஆனால், உலகிலேயே இந்தியா, ரஷ்யா,அமெரிக்கா ஆகிய 3 நாடுகள்தான்இதற்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் நோக்கில் பயணித்துள்ளன. அதில், இந்தியா முன்னணியில் உள்ளது. இத்தகைய சூழலில் அரசாங்கத்துக்கு உறுதுணையாக இல்லாமல், அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பேசுவது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருகிறது. எனவே, இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் பிரதமரின் கிசான் நிதி திட்டத்தில் முறைகேடு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இன்னும் 3 மாதங்களில் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது. அப்போது, அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழகத்தில் பாஜக வலிமை மிக்க சக்தி என்பதை 2021-ல் நிரூபிப்போம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in