Published : 13 Sep 2020 07:27 AM
Last Updated : 13 Sep 2020 07:27 AM

உணவை கழிப்பறையில் வைத்து பயன்படுத்திய முதியவருக்கு பசுமை வீடு நிர்வாக அனுமதி வழங்கினார் ஆட்சியர்

முதியவர் குப்பனிடம் பசுமை வீட்டுக்கான ஆணையை வழங்குகிறார் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன்.

காஞ்சிபுரம்

வீட்டுக்கு கதவு இல்லாததால் உணவுப் பொருட்களை கழிப்பறையில் வைத்து பயன்படுத்தி வந்த முதியவருக்கு, பசுமை வீட்டுக்கான ஆணை அவரது வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம், துளசாபுரம் ஊராட்சி, கண்டிவாக்கத்தில் வசித்து வந்த குப்பன்(65), தனது வீட்டுக்கு கதவுகூட இல்லாத நிலையில் உணவுப் பொருட்களை அரசு கட்டிக் கொடுத்த இலவச கழிப்பறையில் வைத்து பயன்படுத்தி வந்தார். இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்தார். தினகரனும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதரும் குப்பனுக்கு முதல்வரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க, ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து ஆட்சியர் குப்பனுக்கு பசுமை வீடு வழங்க நிர்வாக அனுமதி உத்தரவை வழங்கினார்.

இந்த உத்தரவை ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், குப்பன் இல்லத்துக்கே நேரில் சென்று அவரிடம் வழங்கினார். அவர் வீடு கட்டுவதற்கு தேவையான அம்மா சிமென்ட் வழங்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளார். இந்த வீடு கட்டி முடிக்கும்வரை தன்னார்வலர் ஒருவர் மூலம் அவரை வேறிடத்தல் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x