Published : 13 Sep 2020 07:21 AM
Last Updated : 13 Sep 2020 07:21 AM

சென்னை விமான நிலையம் - வண்டலூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிலம் கணக்கிடும் பணி தீவிரம்

சென்னை

சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டப் பணிக்கு நிலம் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அதன்படி, மேற்கண்ட தடத்தில் முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. இதில், எந்தெந்த சாலைகள் வழியாக செல்வது, எவ்வளவு தொலைவு, வாகன நெரிசல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்திய பிறகு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் திருப்தியாக இருப்பதால், அடுத்தகட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னை விமான நிலையம் - வண்டலூர் கிளாம்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையையொட்டி மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து முதல்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை விமான நிலையம் - வண்டலூர் கிளாம்பாக்கம் இடையே 16 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும். இதில், 1.2 கி.மீ தொலைவுக்கு ஒரு ரயில் நிலையம் என்ற கணக்கீட்டின்படி 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் திருப்தியாக இருப்பதால், அடுத்தகட்டமாக நிலம் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடக்கவுள்ளன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x