Last Updated : 12 Sep, 2020 08:22 PM

 

Published : 12 Sep 2020 08:22 PM
Last Updated : 12 Sep 2020 08:22 PM

சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் கிஸான் திட்டத்தில் 2,300 போலி விவசாயிகள் கண்டுபிடிப்பு: ரூ.28 லட்சம் பறிமுதல்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் கிஸான் திட்டத்தில் 2,300 போலி விவசாயிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து இதுவரை ரூ.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் கிஷான் திட்டத்தில் விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இத்திட்டம் 2018 டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 42 லட்சம் பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. மேலும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோருக்கும் உதவித்தொகை முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும், நிலமே இல்லாத பலரும் உதவித்தொகை பெற்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேட்டில் உதவிய வேளாண்மை உதவி இயக்குநர்கள், கணினி இயக்குநர்கள் என பலர் சிக்கியுள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் கிஷான் திட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 125 பயனாளிகளாக உள்ளனர். மேலும் முறைகேடு கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் அதாவது ஏப்.1-க்கு பிறகே அதிகளவில் நடந்துள்ளது. இதனால் ஏப்.1-க்கு பிறகு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்ற 4,500 பேரிடம் வேளாண்மை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அவர்களிடம் 10 (1) நகல், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண், ரேஷன்கார்டு உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 2,300 போலி விவசாயிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.28 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வேளாணமைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x