Last Updated : 12 Sep, 2020 01:09 PM

 

Published : 12 Sep 2020 01:09 PM
Last Updated : 12 Sep 2020 01:09 PM

புதுச்சேரியில் ஒரே நாளில் 3,792 பேருக்குப் பரிசோதனை: புதிதாக 419 பேருக்குக் கரோனா தொற்று; மேலும் 5 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 3,792 பரிசோதனை செய்யப்பட்டதில், புதிதாக 419 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 12) கூறும்போது, "புதுச்சேரியில் தற்போது அதிகபட்சமாக 3,792 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 380, காரைக்காலில் 15, ஏனாமில் 24 என மொத்தம் 419 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வில்லியனூர் சுல்தான்பேட்டை மாயா வீதியை சேர்ந்த 42 வயது ஆண் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், காமராஜர் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த 61 வயது முதியவர் ஜிப்மரிலும், ஊசுடு புது நகரை சேர்ந்த 60 வயது முதியவர் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரியிலும், காரைக்கால் திருநள்ளாறு கீழவூரை சேர்ந்த 64 வயது முதியவர் பிம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், கன்னியகோவில் கடலூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் பிற பகுதியிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.90 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 19 ஆயிரத்து 439 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,745 பேர், காரைக்காலில் 196 பேர், ஏனாமில் 106, மாஹேவில் 8 பேர் என 3,055 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,473 பேர், காரைக்காலில் 94 பேர், ஏனாமில் 182 பேர், மாஹேவில் 27 பேர் என மொத்தம் 1,776 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,831 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் புதுச்சேரியில் 388 பேர், காரைக்காலில் 12 பேர், ஏனாமில் 45 பேர், மாஹேவில் 10 பேர் என மொத்தம் 455 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 ஆயிரத்து 238 பேர் (73.24 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 95 ஆயிரத்து 919 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 74 ஆயிரத்து 136 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x