Last Updated : 12 Sep, 2020 10:47 AM

 

Published : 12 Sep 2020 10:47 AM
Last Updated : 12 Sep 2020 10:47 AM

மின்சாரம், இணையதள வசதி இல்லை: கேள்விக்குறியாகும் பழங்குடியின மாணவர்களின் கல்வி

கோவை 

இணையதள வகுப்பு, கல்வித் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் இல்லாததால், பழங்குடியின மாணவர்களின் கற்றல் திறன் கேள்விக்குறியாகியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 2020-2021-ம் கல்வியாண்டில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு கடந்த ஆக. 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு உடனுக்குடன் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலமாகவும் மாத அட்டவணை தயாரிக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பள்ளி மாணவர்கள், மின்சாரம், கல்வித்தொலைக்காட்சி, இணையவழி வகுப்புகளின்றி தவித்து வருகின்றனர். இதனால் அவர்களது கற்றல் திறன் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்க கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ். பரமசிவம் கூறியதாவது: ஆனைமலை பகுதியில் 17 வனக் கிராமங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 38 குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 700 பேர், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 386 பேர் என 1,086 பழங்குடியின மாணவர்கள் உள்ளனர்.

கரோனா தொற்றால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து, இக்குழந்தைகள் தங்களது வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இணைய வழியில் வகுப்புகள், கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி இம்மாணவர்கள் தவிக்கின்றனர்.

வி.எஸ்.பரமசிவம்

இவர்களுக்கு நேரடி கற்பித்தலைத் தவிர வேறு வழியே இல்லாத சூழலே நிலவுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, வால்பாறை, ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, டாப்சிலிப், சர்க்கார்பதி, திவான்சாபுதூர் ஆகிய இடங்களில் கல்வி மையங்கள் அமைத்து, வாகன வசதி ஏற்பாடு செய்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, சிறப்பு ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் இங்கு வந்து தங்கி, பழங்குடியின குழந்தைகளுக்கு காலை, மாலை நேரங்களில் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். மேலும், உள்ளூரில் உள்ள படித்த இளைஞர்களை அணுகி, பழங்குடியின குழந்தைகளுக்குப் பாடம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இவர்கள் மீது அரசும், கல்வித் துறையும் உரிய கவனம் செலுத்தாவிட்டால், இடைநிற்றல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதவிர, மாணவர்களின் பெற்றோரும் கடந்த 6 மாதங்களாக வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். மதிய உணவுக்காகவே பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளேஏராளம். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பை மட்டுமே நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. எனவே, அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்குவது போல, பழங்குடியினக்குழந்தைகளுக்கும் அரிசி, பருப்பு, முட்டை வழங்கி, அவர்களை பட்டியினியி
லிருந்து காப்பாற்ற வேண்டும்.

ஆனைமலை கல்லாங்குத்து பகுதியில் பழங்குடியின குழந்தைகளுக்கு வகுப்பு நடத்தும் மாணவர்.

ஊரடங்கு காலத்தில் ஏராளமான தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்கினர். எனினும், அவர்களால் தொடர்ச்சியாக வழங்க இயலவில்லை. எனவே, பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி, நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். பழங்குடியின குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வரும் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தினேஷ்ராஜா, அசாருதீன், ரமேஷ் கண்ணா ஆகியோர் கூறும்போது, "கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர், எல்.எஃப். காலனி, நெல்லித்துறை, மன்னம், புளியங்கண்டி, வேட்டைக்காரன் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்மம்பதி, கல்லாங்குத்து, அண்ணா நகர், பாரதி நகர், சர்க்கார்பதி, ஜெ.ஜெ. நகர், கோபால்பதி பகுதிகளில் பழங்குடியின மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறோம்.

இங்குள்ள படித்த இளைஞர்கள் சிலரும், வகுப்புகள் நடத்த முன் வந்துள்ளனர். அவர்களை முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தி, அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுவதை உறுதி செய்யும்வரை இங்கு தங்கியிருந்து, வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றனர்.ஆனைமலை கல்லாங்குத்து பகுதியில் பழங்குடியின குழந்தைகளுக்கு வகுப்பு நடத்தும் மாணவர்.வி.எஸ்.பரமசிவம்கேள்விக்குறியாகும் பழங்குடியின மாணவர்களின் கல்வி


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x