Published : 12 Sep 2020 07:36 AM
Last Updated : 12 Sep 2020 07:36 AM
தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின்பெயரை சூட்டக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கலைஞர் தமிழ்ப் பேரவை மாநிலச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:
ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், சென்ட்ரல் மெட்ரோ ஸ்டேஷனுக்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் மெட்ரோ என்றும், சிஎம்பிடி மெட்ரோ ஸ்டேஷனுக்கு புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிஎம்பிடி மெட்ரோ ஸ்டேஷன் என்றும் பெயர்களை முதல்வர் பழனிசாமி சூட்டியுள்ளார்.
ஆனால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டத்தை முதன்முதலாக வடிவமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்காக ஜப்பான் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு உள்ளது போன்ற மெட்ரோ திட்டத்தை சென்னையிலும் கட்டமைக்க திமுக ஆட்சிகாலத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மெட்ரோ திட்டத்துக்கு முக்கிய காரணமான கருணாநிதியின் முயற்சியை திட்டமிட்டு மறைக்கவும், அரசியல் காரணங்களுக்காகவும் மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு 3 முன்னாள் முதல்வர்களின் பெயர்களை தமிழக அரசு சூட்டியுள்ளது. அந்த வரிசையில்தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷனுக்கு ‘டாக்டர்கலைஞர் கருணாநிதி டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷன்’ என பெயர் சூட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT