Published : 12 Sep 2020 07:14 AM
Last Updated : 12 Sep 2020 07:14 AM

காவல் உதவி ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணமோசடி செய்ய முயற்சி: குற்றவாளிக்கு சைபர் கிரைம் போலீஸ் வலை

காவல் உதவி ஆணையர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை சரக உதவி ஆணையராக இருப்பவர் ஜூலியஸ் சீசர். இவரைசெல்போனில் தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், ‘‘உங்களுக்கு என்ன ஆனது, உடல் நிலை சரியில்லையா, வறுமையில் வாடுவதாகவும், பண உதவி தேவை எனவும்கேட்டுள்ளீர்களே’’ என விசாரித்துள்ளனர்.

இதை கேட்டு குழப்பம் அடைந்தஜூலியஸ் சீசர், தான் நன்றாக உள்ளதாகவும் தனக்கு எந்த குறையும் இல்லை எனவும் அவர்களிடம் பதிலளித்துள்ளார். அதற்கு அவர்கள்,உங்கள் முகநூல் பக்கத்தில்,நீங்கள்தான் பண உதவி செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளீர்கள் என தெரிவித்தனர்.

பின்னர், தனது பெயரில் யாரோ மர்ம நபர்கள் போலிகணக்கு தொடங்கி இதுபோல் பணம் பறிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து கொண்டார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தொடர்புடைய போலிகணக்கை முடக்கினார். இதையடுத்து உதவி ஆணையர் பெயரில் பணம் பறிக்க முயற்சித்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

50க்கும் மேற்பட்ட..

ஜூலியஸ் சீசர் போன்று 50-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் அதிகாரிகளின் படங்களை பயன்படுத்தி, பேஸ்புக் வாயிலாக, பணம் பறிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோஷ் முத்து பெயரிலும், மர்ம நபர்கள், பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மர்ம நபர்கள், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இதுபோன்ற மோசடி முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x