

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டு கரைக்காமல் விடப்பட்ட விநாயகர் சிலைகளை விதிகளை பின் பற்றி கரைத்துக்கொள்ள உயர் நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் உயர் நீதி மன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், எங்கள் பகுதியில் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் வைத்து பல சேவைகள் செய்து வருகின்றோம்.
எங்கள் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டும் சிலைகளை அமைத்து சதுர்த்தி விழாவை கொண்டாட திட்டமிட்டிருந்தோம்.
.கொரோனா தொற்றால் இந்தாண்டு கொண்டாட இயலவில்லை.
இதனால் சிலைக்கு 4 பேர் மட்டுமே வாகனங்களில் செல்லவும், அரசு விதிகளின் படி குறைந்தளவே பக்தர்கள் கலந்து கொண்டு சிலைகளை கரைக்க எடுத்து செல்கிறோம் என அனுமதி கோரியிருந்தோம். ஆனால் போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையில் வரும் செப்.13 ம் தேதி நாங்கள் வைத்துள்ள சிலைகளை எடுத்து சென்று கரைத்து விட போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசார் கரைப்பதற்காக திட்டமிட்டுள்ள நாள் கரி நாளாக உள்ளது இது எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் வேறு ஒரு நாட்களில் நாங்களே எடுத்து சென்று கரைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, சிலைகளை வைத்தவர்களே அரசின் விதிகளுக்குட்பட்டு கரோன பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடித்து வரும் செப்டம்பர் 16ம் தேதிl கரைத்து கொள்ளலாம் என்று வழக்கை முடித்து வைத்தார்.