Published : 11 Sep 2020 05:12 PM
Last Updated : 11 Sep 2020 05:12 PM

ராம்குமார் தற்கொலை வழக்கு:  சிறை அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் திடீர் சம்மன்

சென்னை

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக 4 ஆண்டுகள் கழிந்த நிலையில் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணையம் புழல் சிறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகம் தாண்டி இந்தியாவையே உலுக்கிய கொலை வழக்கு சுவாதி கொல்லப்பட்ட வழக்கு. சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொடூரமான இந்த கொலைச் சம்பவத்தில் அதே ஆண்டு திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவர் மரணம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அடுத்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி, சிகிச்சையில் மரணம் போன்ற பரபரப்பு செய்திகளால் அமிழ்ந்து போனது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து 19-09-2016-ல் ஆங்கில நாளேட்டில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. 4 ஆண்டுகளுக்குப்பின் மாநில மனித உரிமை ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு செப்டம்பர் 30-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன்கள் ராம்ராஜ், பேச்சிமுத்து ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x