Published : 11 Sep 2020 01:27 PM
Last Updated : 11 Sep 2020 01:27 PM

தனியார் பள்ளிக்கு இணையாக அசத்தும் அரசுப் பள்ளி

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, சிசிடிவி கேமரா கண்காணிப்பு வசதிகளுடன் சித்திரெட்டிபட்டி அரசுப் பள்ளி அசத்தி வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் இப்பள்ளியைத் தேடி வருவதால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம் சித்திரெட்டிபட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2017-18-ல் 16 மாணவ, மாணவியர் மட்டுமே படித்தனர்.

அப்போது எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 6 மா ணவர்கள் வெளியேறியதால் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது.

இதை அறிந்த அப்பள்ளித் தலைமை ஆசிரியை நாகலெட்சுமி மற்றும் 3 ஆசிரியர்கள் அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த நினைத்தனர். தமது சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கணினி வசதி, பிரிண்டர், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, ஓவியங்கள், வர்ணப்பூச்சு, பூச்செடிகள் எனப் பல்வேறு வசதிகளை செய்தனர்.

சித்திரெட்டிபட்டி அரசுப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள்.

பின்னர், கிராம மக்களை சந்தித்து அரசுப் பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தும், ஆங்கில வழிக்கல்வி, மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதையும் எடுத்துக் கூறினர். கடந்த கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது. எல்கேஜியில் 16 பேரும், யூகேஜியில் 22 பேரும் சேர்ந்தனர்.

நடப்பாண்டு முதலாம் வகுப்பில் 14 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. எல்கேஜி, யூகேஜியில் படிக்கும் 40 பேரை சேர்த்து மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

தலைமை ஆசிரியை என்.நாகலெட்சுமி கூறியதாவது: தனியார் பள்ளிக்கு இணையாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கணினி வசதிகள், யோகா, கராத்தே, சிலம்பம் பயிற்சி அளிக்கிறோம். பள்ளி முடிந்து மாணவர்களை பாதுகாப்புடன் அவர்களது வீட்டுக்கு பஸ், ஆட்டோக்களில் அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு மாணவர்கள் மீதும் தனிக் கவனம் செலுத்துவதால் பெற்றோர் எங்களது பள்ளியில் குழந்தைகளை விரும்பிச் சேர்க் கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x