Last Updated : 11 Sep, 2020 01:11 PM

 

Published : 11 Sep 2020 01:11 PM
Last Updated : 11 Sep 2020 01:11 PM

புதுச்சேரியில் 20 ஆயிரத்தை நெருங்கும் கரோனா தொற்று: ஒரே நாளில் 504 பேர் பாதிப்பு; மேலும் 12 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 504 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (செப். 11) கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 2,823 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 438, காரைக்காலில் 35, ஏனாமில் 27, மாஹேவில் 4 பேர் என மொத்தம் 504 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

மேலும், புதுச்சேரியில் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பாகூரை சேர்ந்த 88 வயது முதியவர், நைனார்மண்டபம் வள்ளலார் நகரை சேர்ந்த 44 வயது ஆண், வடமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 74 வயது முதியவர், கொசப்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த 53 வயது ஆண், திப்புராயப்பேட்டையை சேர்ந்த 40 வயது ஆண், இந்திரா நகர் கண்ணகி வீதியை சேர்ந்த 65 வயது முதியவர், சண்முகாபுரத்தை சேர்ந்த 60 வயது முதியவர், முத்தியால்பேட்டை மஞ்சினி நகரை சேர்ந்த 46 வயது ஆண் ஆகிய 8 பேரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தனர்.

அரும்பார்த்தபுரம் வி.மணவெளி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த 53 வயது ஆண், முத்திரையர்பாளையம் கல்மேடுபேட் பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் ஜிப்மரிலும், 70 வயது முதியவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், உருளையன்பேட்டை கோவிந்தசாலையை சேர்ந்த 64 வயது முதியவர் பிற பகுதியிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.92 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 19 ஆயிரத்து 26 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,808 பேர், காரைக்காலில் 184 பேர், ஏனாமில் 126, மாஹேவில் 18 பேர் என 3,136 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,429 பேர், காரைக்காலில் 103 பேர், ஏனாமில் 183 பேர், மாஹேவில் 27 பேர் என மொத்தம் 1,742 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 353 பேர், காரைக்காலில் 31 பேர், ஏனாமில் 10 பேர் என மொத்தம் 394 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை நிலையில் 13 ஆயிரத்து 783 (72.44 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 92 ஆயிரத்து 904 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 71 ஆயிரத்து 196 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு தற்போது 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் பல இறப்புகள் திடீரென நிகழ்ந்ததாக இருக்கின்றது. இதற்கு காரணம், பலர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே, எந்த வீட்டில் யாருக்கு உடல்நிலை சரியில்லை என சென்று விசாரிக்குமாறு கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், கரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஆசிரியர்கள் தயார் செய்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் சென்றால் விழிப்புணர்வு ஏற்படும்" எனத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு தற்போது 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தினமும் 400 முதல் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருவதால் ஓரிரு நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x