Published : 11 Sep 2020 12:51 PM
Last Updated : 11 Sep 2020 12:51 PM

கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் இடங்கள் சேர்க்கை: தமிழக அரசு உத்தரவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளதால் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி கல்லூரிகளை கடந்த 5 மாதமாக திறக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால் பள்ளிமாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கும் பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்யும் அரசு அறிவிப்புக்கு யூஜிசி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வை செப்டம்பர் இறுதிக்குள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் எண்ணிக்கை 109, இதில் காலியாக உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 92000. ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 819 மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருந்தனர்.

மாணவர்களின் சான்றிதழ்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் கல்லூரி வாரியாக மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.சிறப்புப் பிரிவினருக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சேர்க்கை நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டன.

இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் விரும்பிய பாடங்களில் இருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பின. மேலும் விண்ணப்பித்த சில மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடத்தில் சேர ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்நிலையில், உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா அரசாணை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இருந்தும், நகரத்தில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் அரசு கல்லூரிகளில் அதிக அளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி கற்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

அரசு கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே மாணவர்களின் நலன் கருதி 20 விழுக்காடு கூடுதலாக இடம் வழங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார். கல்லூரி கல்வி இயக்குநரின் கடிதத்தினை பரிசீலித்து, 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டிற்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 20 விழுக்காடு கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 20 விழுக்காடு கூடுதலாகவும் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அந்தக் கல்லூரியில் உள்ள பல்கலைக்கழகங்களின் அனுமதியை பெற வேண்டும்” .

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x