Last Updated : 11 Sep, 2020 12:01 PM

 

Published : 11 Sep 2020 12:01 PM
Last Updated : 11 Sep 2020 12:01 PM

பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பயன்பாட்டுக்கு வருமா திருமண மண்டபங்கள்?

உலக அளவில் திருமணங்களுக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக, திருமண நிகழ்வுகளில் மண்டபங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் சிறிய, நடுத்தர, பெரிய என மூன்று வகைகளில் 5,360 திருமண மண்டபங்கள் உள்ளன.

தை, மாசி, பங்குனி, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய சுபமுகூர்த்த மாதங்களில், மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். இந்நிலை யில், கடந்த மார்ச் இறுதியில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், படிப்படி யாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், திருமண மண்டபங்களைத் திறப்பது தொடர்பாக இதுவரை அரசு முறையான அறிவிப்பை வெளி யிடவில்லை. தற்போதெல்லாம் கோயில் மற்றும் வீடுகளில் எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

திருமண மண்டபங்களைப் பொறுத்தவரை, பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். மேடை அலங்காரம், மங்கள வாத்திய இசைக் கலைஞர்கள், வண்ண விளக்குகள், சமையல் பாத்திரங்கள், இருக்கைகள், சாமியானா பந்தல் ஏற்பாட்டாளர்கள், சமையல் கலைஞர்கள், புகைப்படம், வீடியோ எடுப்பவர்கள், மணமகன், மணமகள் ஒப்பணைக் கலைஞர்கள், இன்னிசைக் கச்சேரி நடத்துவோர், உணவு பரிமாறும் தொழிலாளர்கள் என பல லட்சம் பேர் திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நம்பியுள்ளனர்.

இதுவரை மண்டபங்கள் திறக்கப்பட்டாததால், இவர்களது வருவாய் முழுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், சில மண்டபங்களை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும் என மண்டப உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் என்.முத்து கூறும்போது,‘‘கரோனா தொற்று பரவலால் கடந்த 6 மாதங்களாக திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. முன்னரே பதிவுசெய்த ஓரிரு நிகழ்வுகளைத் தவிர, முழு அளவில் திருமண மண்டபங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

அதிகம் பேர் கூடுவார்கள், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மீறப்படும் என்ற காரணங்களைக் கூறி, திருமண மண்டபங்களை முழுமையாகப் பயன் பாட்டுக்குக் கொண்டுவர அனுமதி மறுக்கப்படுகிறது. எனினும், இது தவறான கருத்தாகும். முகூர்த்த நேரத்தில், அதாவது சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரைமட்டுமே அதிகம் பேர் கூடியிருப்பர். பின்னர், மக்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.

திருமண மண்டபங்களைச் சார்ந்த தொழில்களை நம்பி பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன.

சுமார் 20 லட்சத்துக்கும் மேற் பட்டோரின் வாழ்வாதாரமாக திருமண மண்டபங்கள் திகழ்கின்றன. கடந்த 6 மாதங்களாக லட்சக்கணக் கானோர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே, முன்புபோல திருமண மண்டபங்களை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். குறைந்தபட்சம், மண்டபங்களில் உள்ள இருக்கைகளில் பாதி அளவுக்காவது மக்களை அனுமதித்து, நிகழ்ச்சி களை நடத்த அனுமதிக்குமாறு கேட்டுள்ளோம்.

மண்டபங்களில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படும் என உறுதியளிக்கிறோம். அதேபோல, வருமானம் இல்லாததால், கடந்த அரை நிதியாண்டுக்கான சொத்துவரியைத் தள்ளுபடி செய்யுமாறும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். மண்டபங் களுக்கான ஜிஎஸ்டி-யை 18 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்க வேண்டும்’’ என்றார்.திருமண மண்டபங்களைச் சார்ந்த தொழில்களை நம்பி பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன.

சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாக திருமண மண்டபங்கள் திகழ்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x