Published : 11 Sep 2020 07:39 AM
Last Updated : 11 Sep 2020 07:39 AM

விவசாய மின் இணைப்பு பெற விஏஓ சான்று மட்டும் போதும்: ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

விவசாய மின் இணைப்பு பெற விஏஓ அளிக்கும் சான்று மட்டும் போதுமானது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாய மின்இணைப்பு தாமதமின்றி கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தங்கள் செய்துள்ளது.

இதன்படி, மின்இணைப்புக் கோரும் விவசாயக் கிணறு, கூட்டு உரிமையாக இருந்து, அவர் ஒப்புதல் தரமறுத்தால் விண்ணப்பதாரர் பிணை முறிவு பத்திரம் அளித்தால் போதும். விண்ணப்பம் பதிவு செய்யப்படும்.

விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் அளிக்கும் கிணறு மற்றும் நிலத்துக்கான உரிமைச்சான்று மட்டும் போதும்.

மின்இணைப்பு வழங்குவதற்கான மின்மாற்றி, மின்கம்பி சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் முடிவுற்றபின் விண்ணப்பதாரருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அப்போது, தயார் நிலையைத் தெரியப்படுத்தினால் 3 நாட்களுக்குள் மின்இணைப்பு வழங்கப்படும்.

ஒரு சர்வே எண்ணில் அல்லது உட்பிரிவு சர்வே எண்ணில் ஒருவருக்கு 2 கிணறுகள் இருக்கும்பட்சத்தில், தலா அரை ஏக்கர் பாசன நிலம் இருப்பின் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின்இணைப்பு வழங்கப்படும்.

மேலும், ஒரே கிணற்றில், கிணற்றின் உரிமைதாரர்கள் அனைவரும் ஒவ்வோர் மின்இணைப்புக்கும் அரை ஏக்கர் பாசன நிலம் இருக்கும் பட்சத்தில், அந்த கிணற்றுக்கு தனித்தனியாக மின்இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்துக்குள் எந்தப் பகுதிக்கும் மின்இணைப்பை இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x