Last Updated : 11 Sep, 2020 07:35 AM

 

Published : 11 Sep 2020 07:35 AM
Last Updated : 11 Sep 2020 07:35 AM

சென்னையில் உள்ள 47 கூட்டுறவு வங்கிக் கிளைகளில் கரோனா காலத்தில் 43,000 பேருக்கு ரூ.450 கோடி நகைக்கடன்: சேவையை மேம்படுத்த 50 புதிய கிளைகள் திறக்க திட்டம்

சென்னை

கரோனா காலத்தில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி (டிஎன்எஸ்சி வங்கி), சென்னையில் உள்ள தனது 47கிளைகள் மூலம் 43 ஆயிரம் பேருக்கு ரூ.450 கோடி நகைக்கடன் வழங்கியுள்ளது.

கரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்க முன்வந்தது.

இந்த வங்கிக்கு சென்னையில் 47கிளைகள் உள்ளன. இவற்றில் ஏழை,எளிய மக்களுக்காக கரோனா நகைக்கடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்ச கடன் ரூ.1 லட்சம். ஒரு மாத வட்டிரூ.500. ஆண்டு வட்டி 6 சதவீதம். இதுதவிர, வியாபார நகைக் கடன் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தனிநபர் கடன் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரையிலும் 6 சதவீத வட்டியுடன் வழங்கப்படுகிறது. மாத தவணை நகைக்கடன் ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்துக்கு ரூ.3,300 முதல் ரூ.3,500 வரை கிடைக்கிறது. மற்றவங்கிகளைவிட வட்டி குறைவு (எஸ்.பி.ஐ. வங்கியில் 7.5 சதவீதம் வட்டி), மறைமுகக் கட்டணம் இல்லை, பரிசீலனைக் கட்டணம் இல்லை போன்றகாரணங்களால் கூட்டுறவு வங்கிகளில்ஏராளமானோர் நகைக் கடன் பெற்றுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது:

கரோனா பேரிடர் காலத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் 47 கிளைகளில் கடந்த ஏப்.1-ம் தேதி முதல் ஆகஸ்டு 31-ம் தேதி வரை 43 ஆயிரம் பேருக்கு ரூ.450 கோடி கரோனா நகைக்கடன் வழங்கியுள்ளோம். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.200 கோடிதான் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் இருமடங்கு நகைக்கடன் வழங்கியிருக்கிறோம்.

கூட்டுறவு வங்கிச் சேவையை மேம்படுத்தும் வகையில், சென்னை புறநகர்ப் பகுதிகளில் 50 கிளைகள், 100 ஏடிஎம்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர்,வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, நீலாங்கரை, கானாத்தூர், துரைப்பாக்கம், செங்குன்றம், புழல், பாடி, எண்ணூர், திருவொற்றியூர், மணலிஉட்பட 50 இடங்களில் கிளைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார்10 ஆயிரம் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் புதிய கிளைகள் தொடங்கப்படும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x