Published : 10 Sep 2020 07:31 PM
Last Updated : 10 Sep 2020 07:31 PM

கிடப்பில் ரூ.1634 கோடி ஜப்பான் நாட்டு நிதி உதவித் திட்டம்: அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதில் சிக்கல்- ஆர்.டி.ஐ தகவல்

மதுரை

தமிழக அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் ரூ.1634 கோடி ஜப்பான் நாட்டு நிதியுதவி திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்தத் திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட 2022ம் ஆண்டிற்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு மேற்பார்வையில் தமிழக அரசு ஜப்பான் நாட்டின்( JICA-Japanese International Co-operation Agency) நிறுவனத்திடம் ரூ.1634 கோடி கடனுதவி பெறுவதற்கான திட்டம் ஒப்பந்தமானது.

அரசு மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவக் கருவிகள், அறுவை சிகிச்சை அரங்குகள், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தவதற்காக ஜப்பான் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயார் செய்தது.

இந்தத் திட்டத்தை 2022 ஆண்டுக்குள் முடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி ஜப்பான் நிறுவனம் 85 சதவீதம் நிதி பங்களிப்புடன் மீதம் 15 சதவீதம் மாநில அரசு நிதி பங்களிப்புடன் செயல்படுத்துவது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஜப்பான் நிறுவனத்திடமிருந்து முழுமையாக பெறவுள்ள ரூ 1387.87 கோடிகள் கடன் தொகையை, ஆண்டிற்கு 0.30% சதவீதம் வட்டியுடன் தமிழக அரசு 40 ஆண்டிற்குள் திருப்பி செலுத்தவேண்டும்.

ஆண்டிற்கு ரூ.4,16,10,000 வட்டி வீதம் 40 ஆண்டிற்கு ரூ.166 கோடியே 44 லட்சம் வட்டி மட்டுமே இந்த திட்டத்திற்காக தமிழக அரசு கட்டவேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 10 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 7 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 4 தாலுகா மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டது.

ஆரம்பக்கட்டப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இடம் தேர்வில் சர்ச்சை, முறையான திட்டமிடல்கள் இல்லாமல் இத்திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நகர்ந்தது. தற்போது நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் நிலவரப்படி ரூ.448 கோடியே 26 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள நிதிக்கு இன்னும் திட்டம் தயாரிக்கப்படாமலும் உள்ளது. அதன் பிறகு கரோனா தொற்று நோய் பரவலால் இப் பணிகள் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து இந்தத் தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெற்ற சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது:

தற்போது ஊரடங்கு தளர்வுகள் தளர்த்தப்பட்டு இப்பணிகள் மந்தமாகவே நடைபெற்றுவருதால் திட்டமிட்டப்படி 2022 இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வர வாய்ப்பே இல்லை.

இந்தத் திட்டத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கட்டிடம் கட்ட ரூ.135 கோடியே 50 லட்சமும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.121 கோடியே 80 லட்சமும், கோயமுத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 110 கோடியே 90 லட்சமும், ஆவடி அரசு மருத்துவமனைக்கு ரூ. 20 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரமும், திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 20 கோடியே 1 லட்சத்த 61 ஆயிரமும், சேலம் அம்மாபேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ. 20 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரமும், திருநெல்வேலி கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.20 கோடியே 1 லட்சத்து 61 ஆயிரமும் என்று நிதி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.140 கோடி தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக, ரூ.6.17 கோடி பன்னாட்டு குழுமத்திற்கும், ரூ. 13.81 கோடி நிர்வாகம் மற்றும் இதர இனங்களுக்கும், ரூ,8.29 கோடி சேலம் அம்மாப்பேட்டையில் கட்டிடம் கட்ட நிலம் வாங்குவதற்கும் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பழைய கட்டிடங்களுக்கு இடிப்பதற்காக ரூ.23.57 லட்சமும் என்று மொத்தமே ரூ.168.50 கோடிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு செலவு செய்துள்ளனர்.

மீதமுள்ள நிதி இன்னும் செலவு செய்யப்படவில்லை. தற்போது உலகளாவிய ஏற்பட்டுள்ள கரோனா அச்சுறுத்ததால் இத்திட்டம் கைவிட்டு போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் இந்த திட்டத்திற்காக பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு முன் அங்குள்ள நோயாளிகளை மற்ற கட்டிடத்திற்காக மாற்ற வேண்டும். அதற்காக மற்ற வார்டுகளை தயார் செய்யும் பணிகள் நடக்கிறது. அது முடிந்ததும், இந்த திட்டம் அமைய உள்ள பகுதியில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x