Last Updated : 10 Sep, 2020 01:48 PM

 

Published : 10 Sep 2020 01:48 PM
Last Updated : 10 Sep 2020 01:48 PM

புதுச்சேரியில் புதிதாக 452 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு; 350-ஐக் கடந்த இறப்பு எண்ணிக்கை

புதுச்சேரியில் இன்று புதிதாக 452 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 536 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 353 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (செப். 10) கூறும்போது, "புதுச்சேரியில் 2,264 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 288, காரைக்காலில் 123, ஏனாமில் 38, மாஹேவில் 3 பேர் என மொத்தம் 452 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

மேலும்,புதுச்சேரியில் 5 பேர், ஏனாமில் ஒருவர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். சித்தன்குடி 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த 86 வயது முதியவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்த 50 வயது ஆண், உழவர்கரை 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த 68 வயது மூதாட்டி, கொசப்பாளையம் வாணிதாசன் வீதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகிய மூவரும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், அரியாங்குப்பம் ராஜன் நகரை சேர்ந்த 74 வயது முதியவர் ஜிப்மரிலும், ஏனாம் கனகலபேட்டா பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 353 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.90 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 18 ஆயிரத்து 536 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,788 பேர், காரைக்காலில் 199 பேர், ஏனாமில் 109, மாஹேவில் 9 பேர் என 3,105 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,390 பேர், காரைக்காலில் 84 பேர், ஏனாமில் 183 பேர், மாஹேவில் 32 பேர் என மொத்தம் 1,689 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,794 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் புதுச்சேரியில் 371 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாமில் 26 பேர், மாஹேவில் 4 பேர் என மொத்தம் 422 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 90 ஆயிரத்து 643 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 69 ஆயிரத்து 541 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்த புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், ஏஎன்எம்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 8 குழுவாக பிரிக்கப்பட்டு இன்று முதல் ஒரு வாகனத்தில் உமிழ்நீர் பரிசோதனை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், துணை சுகாதார நிலையங்களில் தினமும் குறைந்தது 50 முதல் 100 உமிழ்நீர் பரிசோதனைகள் எடுக்கவும், வீடு, வீடாக சென்றும் பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் தற்போது 300 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதனை 600 ஆக உயர்த்தவும், ஏனாமில் 120 பரிசோதனைகள் எடுக்கப்படுகின்றன. அதனை 300 ஆகவும், மாஹேவில் 100 பரிசோதனைகளை 200 ஆகவும் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தினமும் 2,500 பரிசோதனைகள் வரை எடுக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் 3,000 பரிசோதனைகள் வரை எடுக்கப்படும். இதேபோல் தொடர்ந்து நாம் பரிசோதனைகளை அதிகப்படுத்தி வருகிறோம்.

நாம் எந்த அளவு பரிசோதனை செய்தாலும் கூட 'நெகட்டிவ்' என்று வந்தவர்கள் மீண்டும் வெளியே சுற்றுகின்றனர். இதனால் அவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் நாளை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்துகொள்ள கொண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்றி கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x