Last Updated : 13 May, 2014 10:40 AM

 

Published : 13 May 2014 10:40 AM
Last Updated : 13 May 2014 10:40 AM

வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அதிகரிக்கிறது பெற்றோரின் சுமை

வங்கிகளில் கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமை அதிகரித் துள்ளது.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கல்விக் கடன் வழங்கி வருகின்றன. கல்விக் கடனுக்கான வட்டியை பெற்றோர் மாதந்தோறும் செலுத்த வேண்டும். இக்கடனுக்கான அசல் தொகையை மாணவர் படித்து முடித்து வேலைக்குப் போன பிறகு செலுத்தினால் போதும்.

கல்விக் கடனைப் பொருத்தவரை மகனாக இருந்தால் படித்து முடித்து வேலைக்குப் போய் கடனை அடைத்துவிடுவான் என்று நினைக்கும் பெற்றோர், மகளாக இருந்தால் படித்து முடித்து வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு கல்விக் கடனை அடைக்காமல் போய்விடக் கூடும் என்பதால் மகளை கடன் வாங்கி படிக்க வைக்க அவர்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற காரணத்தால் மாணவிகள் படிக்கா மல் இருந்துவிடக்கூடாது என்பதால், மாணவிகளுக்கு அரை சதவீதம் குறைவான வட்டியில் வங்கிகள் கல்விக் கடன் அளிக்கின்றன. “ஆண்டுதோறும் சத்தமில்லாமல் கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அதிகரித்து விடுகின்றன” என்று பெற்றோர் புகார் கூறுகின்றனர்.

இந்தியன் வங்கியில் கல்விக் கடன் வட்டி மாணவனுக்கு 12.05 சதவீதமாகவும், மாணவிக்கு 12 சதவீதமாகவும் இருந்தது. இது, தற்போது மாணவனுக்கு 0.50 சதவீதமும், மாணவிகளுக்கு 0.05 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆண்டுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை வாங்கிய கடன் ரூ.3 லட்சம் என்று வைத்துக் கொண் டால் மேற்கண்ட புதிய வட்டி விகிதத்தின்படி மாணவனாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.1500-ம், மாணவியாக இருந்தால் ரூ.150-ம் அதிகமாக செலுத்த வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாணவனுக்கான கல்விக் கடன் வட்டி 12.25 சதவீதம், மாணவிக்கு 11.75 சதவீதம், கனரா வங்கியில் மாணவனுக்கு 11.75 சதவீதம், மாணவிக்கு 11.25 சதவீதம், தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மாணவ, மாணவி என இருபாலருக்கும் ஒரேமாதிரியாக 14.25 சதவீதம் கல்விக் கடன் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் கடந்த ஆண்டு வட்டி விகிதமே நீடிக்கிறது என்றும் இந்தாண்டு இதுவரை வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றும் அந்த வங்கிகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரத ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு மாணவனிடம் 13.50 சதவீத வட்டியும், மாணவியிடம் 13 சதவீத வட்டியும் தற்போது வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி 0.20 சதவீதம் கல்விக் கடன் வட்டி உயர்த்தப்பட்டது என்று அவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடா சலம் கூறுகையில், “கல்விக் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட் டிருப்பதற்கு தாராள மயமாக்கலின் தாக்கமே காரணம். தாராளமயமாக் கலுக்கு முன்பு இதுபோல வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. கடன் அல்லது டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தோ அல்லது அதிகரித்தோ அந்தந்த வங்கி நிர்வாகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருப்பதும் ஒரு காரணம்தான்” என்றார்.

“ஆண்டுக்கு இத்தனை லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கோடிக் கணக்கான பணம் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று அரசியல் வாதிகள் மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால், கல்விக் கடனுக்கான வட்டி விகித உயர்வால் பெற்றோரின் சுமை அதிகரித்திருப்பது பற்றி அவர்கள் கவலைப் படுவதேயில்லை.

இதுவே பெரிய நிறுவனங் களுக்கு பாதிப்பு என்றால் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி விடுவார்கள்” என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x