ராஜபாளையத்தில் எரியூட்டப்பட்ட சடலத்தின்மீது படுத்து இளைஞர் தற்கொலை

ராஜபாளையத்தில் எரியூட்டப்பட்ட சடலத்தின்மீது படுத்து இளைஞர் தற்கொலை
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எரியூட்டப்பட்ட சடலத்தின் மீது படுத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

ராஜபாளையம் அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் நெஞ்சுவலியால் நேற்று உயிரிழந்தார். இன்று காலை ராஜபாளையம் அருகே உள்ள காயகுடியாற்று பகுதியில் உள்ள மயானத்தில் அவரது சடலத்தைத் தீ வைத்துத் தகனம் செய்தனர்.

இன்று அதிகாலை சடலத்தைப் பார்த்து இறுதி காரியம் செய்வதற்காக உறவினர் சென்றனர். அப்போது எரியூட்டப்பட்ட சடலத்தின் மீது உடல் பாதி எரிந்த நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி நாகசங்கர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து எரியூட்டப்பட்ட சடலத்தின் மீது பாதி எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டனர்.

விசரனையில் இறந்தவர் செவல்பட்டி பகுதியை சேர்ந்த ராம்சிங் (26) என்பது தெரியவந்தது.

மேலும், இவர், கொத்தனார் வேலை பார்த்து வந்ததாகவும் கடந்த 3 நாள்களாக தன்னை யாரோ தாக்க வருவதாகவும் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

இந்தநிலையில், இறந்தவர் உடல் எரிந்து கொண்டிருந்த பொழுது சுடுகாட்டில் சென்ற ராமசிங், அந்த சடலத்தின் மீது படுத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in