Published : 09 Sep 2020 06:19 PM
Last Updated : 09 Sep 2020 06:19 PM

துரைமுருகன் என்றால் கனிவு; டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு; இந்தக் கனிவும் கண்டிப்பும் திமுக வளர்ச்சிக்குப் பயன்படட்டும்: ஸ்டாலின் பேச்சு

துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் மு.க.ஸ்டாலின்.

சென்னை

துரைமுருகன் என்றால் கனிவு, டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழுக் கூட்டம், இன்று (செப். 9) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

திமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகனையும், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலுவையும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட பொன்முடி, ஆ.ராசாவையும் வாழ்த்தி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"என்றும் இல்லாத அளவுக்கு இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். திமுகவின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுக்குழு உறுப்பினர்களான 3,500 பேரால் மட்டுமல்ல; லட்சக்கணக்கான தொண்டர்களின் மூலமாக, புதிய பொதுச் செயலாளரும் புதிய பொருளாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

துரைமுருகன், டி.ஆர்.பாலு இருவருக்கும் வந்து சேர்ந்திருக்கும் பொறுப்பு வேண்டுமானால் புதியதாக இருக்கலாம்; ஆனால் திமுகவுக்கு, எங்களுக்கு நீங்கள் இருவரும் புதியவர்கள் அல்ல; நெடுங்காலம் பழகிய முகங்கள். எங்களில் இருவர்தான் நீங்கள்!

உங்கள் இருவரையும் இளைஞர்களாக நான் முதலில் பார்த்தேன். இன்றைக்குப் பொதுச் செயலாளராகவும் பொருளாளராகவும் பார்க்கிறேன். அதுவும் தலைவராக இருந்து பார்க்கிறேன்.

உங்களைப் பார்க்கும்போது, எனக்கு, உங்கள் முகம் தெரியவில்லை. நம்மை எல்லாம் ஆளாக்கிய கருணாநிதிதான் தெரிகிறார்! அவரில்லாமல் நாம் மூன்று பேரும் இல்லை! ஏன், யாருமே இல்லை!

நம்மை இந்தப் பொறுப்புகளில் அமர வைத்துவிட்டு, வங்கக் கடலோரம் ஓய்வு கொண்டிருக்கிறார் அவர்.

திமுகவுக்கு துரைமுருகன் பொதுச்செயலாளர், டி.ஆர்.பாலு பொருளாளர் என்பதை விட, தலைவர் கருணாநிதிக்கு மகிழ்ச்சிக்குரிய வேறு ஒரு செய்தி இருக்க முடியாது!

துரைமுருகன், டி.ஆர்.பாலு இருவரும் திடீரென்று இந்த உயரத்தை எட்டிவிடவில்லை.

நான் எப்படி படிப்படியாக வளர்ந்து வந்தேனோ, அதைப் போலவே அவர்களும் படிப்படியாக வளர்ந்து இந்த உயரத்தை எட்டி இருக்கிறார்கள்.

நான் தலைவராக இருக்கும்போது, துரைமுருகன் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார் என்பது, எனக்குக் கிடைத்த பெருமை!

1970-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் துரைமுருகனை முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட தலைவர் கருணாநிதி கட்டளையிட்டார். ஆனால் துரைமுருகன் மறுத்தார்.

'நான் வழக்கறிஞராகப் பயிற்சி செய்யப் போகிறேன்' என்று சொல்லி இருக்கிறார். அப்போது அருகில் இருந்த தயாளு அம்மாதான், 'ஏன் வேண்டாம்ன்ற? தேர்தலில் நில்லு' என்று சொல்லி இருக்கிறார்

'என்னிடம் பணமெல்லாம் இல்லைம்மா' என்று துரைமுருகன் சொன்னபோது, 'அதெல்லாம் கட்சியில கொடுப்பாங்க' என்று சொன்னதும் தயாளு அம்மாதான்.

அந்த நம்பிக்கையில் முதன்முதலாக காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்டார்.

கட்சி நிதியாக 10 ஆயிரம், தலைவர் கருணாநிதியின் நிதியாக 10 ஆயிரம், தயாளு அம்மாள் 10 ஆயிரம் என வந்த நிதியை வைத்துதான் முதல் தேர்தலில் தேர்தல் பணியை ஆற்றினார்.

அன்றைய தினம், நானும் காட்பாடி தொகுதிக்கு வந்து தேர்தல் பிரச்சார நாடகம் போட்டேன்..

துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளராக ஆகிடும் செய்தி, தயாளு அம்மாவுக்குத் தெரிந்தால் அவர் மகிழ்ச்சியடைவார்.

ஒருமுறையல்ல; 7 முறை காட்பாடி தொகுதியிலும், ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறையும் வென்றார். 9 முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் 'சட்டப்பேரவை ஸ்டாராக', 'சூப்பர் ஸ்டாராக'ச் செயல்படும், துரைமுருகனைப் போன்ற மற்றுமொரு சீனியர் நம் கட்சியிலும் இல்லை; வேறு கட்சிகளிலும் இல்லை! தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இல்லை!

அத்தகைய பெருமைக்குரிய ஒருவரை திமுக, பொதுச் செயலாளராகப் பெற்றுள்ளது.

காட்பாடி மாவட்டப் பிரதிநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர், தணிக்கைக் குழு உறுப்பினர், மாநில மாணவரணிச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், திமுக துணைப் பொதுச் செயலாளர், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர், பொருளாளர், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், பொதுப்பணித்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர், பொதுப் பணித்துறை அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் துரைமுருகன்!

இந்த மகுடங்கள் வரிசையில் திமுக பொதுச் செயலாளர் பொறுப்பையும் அடைந்துள்ளார்.

சட்டப்பேரவையில், 'இடி - மின்னல் - மழை' என்று கலக்கியவர்களில், துரைமுருகன் மின்னல் என்று அழைக்கப்பட்டார். மின்னல் வான மண்டலத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் ஒளிவீச்சுதான்.

அந்த வகையில் பார்த்தால் துரைமுருகன், ஐம்பது ஆண்டுகளாக திமுகவுக்குள் ஒளிபாய்ச்சிக் கொண்டு இருப்பவர். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். தானும் மகிழ்ச்சி அடைந்து, மற்றவர்களையும் மகிழ்விப்பவரே அனைவராலும் மதிக்கப்படுவார். அந்த வகையில் அனைவரது விருப்பத்துக்கும் உரியவராக துரைமுருகன் இருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் எனக்கு எல்லா வகையிலும் வழிகாட்டியாக இருக்கிறார்.

அத்தகைய துரைமுருகனை வாழ்த்துகிறேன்! போற்றுகிறேன்! பாராட்டுகிறேன்!

அதைப் போலவே டி.ஆர்.பாலுவும், திமுகவுக்குக் கிடைத்த ஆற்றல் மிக்க போர்வீரர்! மூவேந்தர்கள் ஆண்ட நாட்டை ஒரு வேந்தர் ஆண்டால் எப்படி இருக்குமோ, அப்படி இன்றைக்கு நான்கு மாவட்ட மாவட்டமாக இருக்கும் சென்னையை, அன்று ஒற்றை மனிதராகக் கட்டி ஆண்டவர் நம்முடைய டி.ஆர்.பாலு.

இளம் வயதில் திமுக பணியில் இறங்கியவர் பாலு.

திமுகவில் 1957-ம் ஆண்டு 17 வயதில் இணைந்தவர், இன்றைக்குப் பொருளாளராக வளர்ந்து வந்துள்ளார்.

பகுதி பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர், என வளர்ந்து 1974-ல் மாவட்ட துணைச் செயலாளர் ஆனார். 'மிசா' நெருக்கடி காலத்தில் கருணாநிதிக்கு ஓட்டுநராக கூடவே இருந்தவர். மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

1982-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக ஆனார். தலைமைக் கழகத்தால் தலைநகர் சென்னையில் அறிவிக்கப்பட்ட மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் அனைத்தையும் திறம்பட நடத்தி, தலைநகர் சென்னையில் திமுகவை தலைநிமிர வைத்தவர் பாலு. திமுகவை அனைவரும் அண்ணாந்து பார்க்கக் காரணமாக இருந்தவர் பாலு.

'வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடிய தம்பிகளில் பாலுவும் ஒருவர்' என்று தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர். 1988-ம் ஆண்டு, 'தேசிய முன்னணி' சென்னையில் தொடங்கப்பட்டபோது நடந்த மிகப் பிரம்மாண்டமான ஊர்வலம், பொதுக்கூட்டம்; அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள்.

அந்த ஊர்வலத்தில், வெள்ளுடை அணிந்து அணிவகுத்த இளைஞர் அணி வீரர்களுக்கு நான் தலைமை வகித்து வந்தேன்.

சுமார் 16 மணிநேரத்துக்கும் மேல் அந்தப் பேரணியில் திமுக தொண்டர்கள் அணிவகுத்து வந்தார்கள். இந்தியத் தலைவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தார்கள். அத்தகைய தேசிய முன்னணித் தொடக்கவிழாவை நடத்திக் காட்டியவர் பாலு.

இவை அனைத்தையும் விட இருபத்தி நான்கு மணிநேரமும் 'கலைஞர் - கலைஞர்' என்ற சிந்தனையோடு இருப்பவர் பாலு.

ஜெயலலிதா அரசாங்கத்தால் தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது, அவரை எங்கே கொண்டு செல்கிறார்கள், எதற்காகக் கைது செய்துள்ளார்கள் என்று தெரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டு இருந்தார்கள்.

சிபிசிஐடி அலுவலகத்துக்குள் தலைவரைக் கொண்டு போய் வைத்து தனிமையாக, யாரும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக பூட்டி வைத்திருந்தபோது, 'ஓப்பன் த டோர்' (Open The Door) என்று உரத்த குரலெழுப்பி, அந்தக் கதவை உடைக்கப் பாய்ந்தவர் பாலு. அப்போது அவர் மத்திய அமைச்சர். அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை.

தலைவர் கருணாநிதிக்கு ஒன்று என்றால், உயிரையும் கொடுக்கக் கூடியவராக இருக்கக் கூடியவர் பாலு.

அவர் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆனபோது, தினமும் காலையில் அண்ணா அறிவாலயம் வந்துவிடுவார். மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்த்து வைத்தார்.

திமுகவின் நிர்வாகிகள் கூடி இருக்கும் கூட்டத்திலேயே நான் சொன்னேன், 'எல்லோரும் பாலுவைப் போல பணியாற்ற வேண்டும்" என்று சொன்னேன்.

1986-ல் மாநிலங்களவை உறுப்பினர், 1996-ல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர், 1998-ல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர், 1999-ல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர், 2004-ல் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர், 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர், 2019-ல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்.

மூன்று முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

1986 முதல் 1992 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

1996 - 1998 வரை பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

1999 - 2003 வரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2004 - 2009 வரை, கப்பல்துறை மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

இப்படிப் பல்வேறு பொறுப்புகளை திமுகவிலும் மத்திய அரசிலும் வகித்தவர் டி.ஆர்.பாலு. அவர் இன்றைக்கு திமுக பொருளாளராக உயர்ந்துள்ளார்.

துரைமுருகன், இனி வகிக்கப் போகும் பொதுச்செயலாளர் பொறுப்பு என்பது, அண்ணா இருந்த பொறுப்பு! நெடுஞ்செழியன் இருந்த பொறுப்பு! க.அன்பழகன் இருந்த பொறுப்பு! இந்தச் சிறப்பு மிகு வரலாற்றுக் கடமை உங்கள் தோள் மீது விழுந்துள்ளது!

டி.ஆர்.பாலு, இனி வகிக்கப் போகும் பொருளாளர் பொறுப்பு என்பது, தலைவர் கருணாநிதி இருந்த பொறுப்பு! எம்.ஜி.ஆர். இருந்த பொறுப்பு! க.அன்பழகன் இருந்த பொறுப்பு! சாதிக் இருந்த பொறுப்பு! நான் இருந்த பொறுப்பு!

இந்தச் சிறப்புமிகு வரலாற்றுக் கடமை உங்கள் தோள் மீது விழுந்துள்ளது!

உங்கள் மொத்த திறமையையும் திமுகவுக்குத் தாருங்கள், திமுக வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்கள்.

துரைமுருகன் என்றால் கனிவு. டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு.இந்தக் கனிவும் கண்டிப்பும் திமுக வளர்ச்சிக்குப் பயன்படட்டும்.

முதன்மைச் செயலாளராக இருக்கும் கே.என்.நேரு பொறுப்பேற்று கூடுகின்ற முதல் பொதுக்குழு என்பதால் அவரையும் நாம் பாராட்ட வேண்டும். தீரர்களின் கோட்டமாம் திருச்சி தந்திருக்கும் ஆற்றல்மிக்க செயல்வீரர்களில் ஒருவர் நேரு. அவர் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பேற்று அனைவரும் பாராட்டும் வகையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக எந்நாளும் உழைக்கக்கூடிய ஆற்றல்மிக்க செயல்வீரர் அந்தியூர் செல்வராஜ். அவர் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, அந்தப் பணியைச் சிறப்பாக ஆற்ற உறுதியேற்றிருக்கிறார்.

அவர்களுக்கும் இந்நேரத்தில் என்னுடைய வாழ்த்துகள்.

அதேபோல், தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும் ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளன.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கும் இரண்டு லட்சியவாதிகள், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் பொன்முடி.

ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆ.ராசா.

பொன்முடி, மூன்று முறை மாநில அமைச்சராக இருந்தவர்.

ஆ.ராசா, இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்தவர்.

பொன்முடியைப் பொறுத்தவரையில், விழுப்புரம் மாவட்ட திமுகவுடன் அவரது பணி முடிந்துவிடக்கூடாது என்பதால் தலைமைக் கழகத்துக்கு அவரை அழைத்துக் கொண்டேன்.

இன்றைக்கு தலைவர் என்ற பொறுப்பைத் தாங்கி உங்கள் முன்னால் நிற்கிறேன். ஆனால் 2003-ம் ஆண்டே விழுப்புரம் மண்டல மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் பெருமையை எனக்குத் தந்தவர் பொன்முடி.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் நான் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு கலந்துகொண்ட முதல் கூட்டம் விழுப்புரத்தில் நடந்த முப்பெரும் விழா. அதனைச் சிறப்புற நடத்திக் காட்டியவர் பொன்முடி.

அவரே பொன்முடி. அவரது முடிக்கு மேலும் ஒரு மகுடத்தைச் சூட்டுவதில் திமுக பெருமைப்படுகிறது!

அதேபோல், நம்முடைய ஆ.ராசாவுக்கு இன்றைய தினம் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சொற்களைக் கடன் வாங்கிச் சொல்கிறேன்.

'என் உள்ளம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவர் என்றும்

பட்டிக்காட்டுப் பொட்டலில் பூத்துக்குலுங்கும் புரட்சியாளர் என்றும்

தகத்தயா சூரியன்' என்றும் கருணாநிதியே பாராட்டுப் பட்டயம் வாசித்து அளித்த பிறகு தனியாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது.

பொன்முடியாக இருந்தாலும், ஆ.ராசாவாக இருந்தாலும், தங்களது அறிவை, உழைப்பை, திறமையை, ஆற்றலை, முழுமையாக திமுகவின் வளர்ச்சிக்கு எழுச்சிக்கு மேம்பாட்டுக்கு பயன்படுத்திப் பாடுபடுங்கள்.

நாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியாக வேண்டும்.

'கரோனா... கரோனா’ என்று மார்ச் மாதம் முதல், ஐந்து மாதம் ஓடிவிட்டது.

இன்னும் சில மாதங்கள் தான் இருக்கின்றன. இந்த ஐந்து மாதத்துக்கும் சேர்த்து நாம் தேர்தல் வேலைகளைப் பார்க்க வேண்டும்.

தேர்தல் எப்போது நடந்தாலும், நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். ஆனால் நாம் அந்த வெற்றியை எளிதில் பெற்றிட விடமாட்டார்கள். போராடித்தான் வெற்றியைப் பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

இன்றைய ஆளும்கட்சியின் கொள்ளைகள், கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன், ஆளும்கட்சியின் நிறைவேற்றாத வாக்குறுதிகள், பாதியில் நின்று போன திட்டங்கள், கரோனாவிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் கொடிய ஆட்சி இன்றைக்குத் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இவை குறித்த தகவல்களைத் திரட்டுங்கள். மக்களுக்கு நினைவூட்ட வேண்டியவை, இவைதான்.

கடந்த பத்தாண்டு காலத்தில், தமிழகம் எந்த வகைகளில் எல்லாம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதை மக்கள் மன்றத்தில் நாம் வைத்தாக வேண்டும்.

அதிமுக அரசு 2011-ம் ஆண்டு முதல், ஒரு துரும்பையும் தூக்கிப் போடவில்லை என்பது மக்களுக்குத் தெரியும். அதனை மக்களுக்கு நினைவூட்டும் பிரச்சாரத்தை நாம் செய்தாக வேண்டும்.

நான் ஒருவன் அல்ல, இந்த மேடையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல, இயக்கத்தின் லட்சோப லட்சம் தொண்டர்களும் தலைவர்களாக மாறி உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால்தான் வெற்றி பெற முடியும்.

உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு இலக்குதான் இருக்க வேண்டும்.

அதுதான் மீண்டும் திமுக ஆட்சி! மீண்டும் கருணாநிதி ஆட்சி! மீண்டும் நம்முடைய ஆட்சி!

நான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த பொதுக்குழுவில் பேசும்போது சொன்னேன்.

'இன்று முதல் நான் வேறொரு மு.க.ஸ்டாலின்' என்று சொன்னேன். அதேபோல அனைவரும், இன்று முதல் தங்களிடம் குறைகள் இருப்பின், அவைகளைக் களைந்து திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்.

இதுவரை எப்படிச் செயல்பட்டோம் என்பதை விட, இனி எப்படிச் செயல்படப் போகிறோம் என்பதுதான் முக்கியம். அடுத்த ஆறுமாதம் நம்முடைய செயல்பாடுகள் காரணமாகத்தான் திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது என்ற பெருமையை நீங்கள் பெற்றாக வேண்டும்.

இந்த மேடையில் நிற்கும்போது, கருணாநிதியின் நினைவுதான் என்னை வாட்டுகிறது.

2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் நம்மை விட்டு அவர் மறைந்தார். இந்த இரண்டாண்டு காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, திமுக அடைந்துள்ள வெற்றி, பெற்றிருக்கும் மரியாதைகள் எனக்கே மலைப்பைத் தருவதாக அமைந்துள்ளன.

இன்றைக்கு நாட்டை ஆளும் அரசு எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. அனைத்திலும் லஞ்சம், ஊழல். தமிழ்நாட்டின் கடன் 4.45 லட்சம் கோடி ரூபாய். இதைத்தான் சாதனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! இந்த வேதனை மிகுந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பணியை உடனே தொடங்கியாக வேண்டும்.

கொடிய கரோனா காலத்திலும், மக்களுக்குத் துணை நிற்க வேண்டும், பணியாற்ற வேண்டும், நாமும் பக்க பலமாய் இருந்திட வேண்டும் என 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தைத் தொடங்கினோம். இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்திலேயே எந்தவொரு கட்சியாலும் இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றிட முடியாது. அதைச் செய்தோம்.

தங்களது உயிரையே பணயம் வைத்து இந்தப் பணியில் ஈடுபட்டவர்களை வாழ்த்துகளை, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x