Last Updated : 09 Sep, 2020 03:21 PM

 

Published : 09 Sep 2020 03:21 PM
Last Updated : 09 Sep 2020 03:21 PM

விவசாயிகள் சங்கங்கள் வழியாகவே குடிமராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு- புட்டுக்கு மண் சுமந்த கதையை சுட்டிக்காட்டிய நீதிபதி

மதுரை

தமிழகத்தில் வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே குடிமராத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதால், அந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்து, முறையாக தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட விவசாய சங்கங்களுக்கு குடிமராமத்துப் பணிகளை ஒதுக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் பலர் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

தமிழக கலாச்சாரத்தின் ஒரு பகுதி குடிமராமத்துப் பணி. பழங்காலத்தில் குடிமராமத்து பணிக்காக தண்டோரா போட்டு வீட்டு ஒருவரை அனுப்புமாறு அழைக்கப்படுவர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வைகை கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வருமாறு பாண்டிய மன்னன் கட்டளையிட்டான். அப்போது மூதாட்டி வந்தியம்மைக்காக கூலி ஆள் போல் வந்த இறைவன் சிவபெருமான், அவர் தந்த புட்டுக்காக மண் சுமந்தார். இந்த திருவிளையாடல் புட்டுத்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பழங்காலம் தொட்டு இருந்து வரும் குடிமராமத்துப் பணி தமிழகத்தில் 1975-ல் ஆயுக்கட்டுதாரர்களை கொண்டு குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என புதுப்பிக்கப்பட்டது.

இப்பணி மேற்கொள்ள மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மை முறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டப்படி மேலாண்மை குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிமராமத்துப் பணியில் நீர்ப்பிடிப்பு பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, உள் மற்றும் வரத்து கால்வாய்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் மூலம் பொதுப்பணித்துறை முழுமையான திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

நில அளவை மற்றும் கிராம வரைபடத்தின் அடிப்படையில் கால்வாய்களை அடையாளம் காணும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட வேண்டும்.

எல்லையை நிர்ணயிக்கும் வரைபடங்களின் படி நீர்நிலைகளை அடையாளம் காண வேண்டும்.

முறைகேடுகளாக நீர்நிலைகளில் பட்டா வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளின் அளவு குறைந்திருந்தால், அதற்குரிய காரணத்தை பதிவு செய்யப்பட வேண்டும்.

நீர்நிலைகளுக்கான நீர் வரத்து தடைபட்டிருந்தால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

குடிமராமத்துப் பணியில் நீர் நிலைகளின் கரைகளை பலப்படுத்த மரக்கன்று நடுவதை கட்டாயமாக வேண்டும். இனிவரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்களின் மூலமாகவே குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x