Last Updated : 09 Sep, 2020 03:05 PM

 

Published : 09 Sep 2020 03:05 PM
Last Updated : 09 Sep 2020 03:05 PM

உரிய நேரத்தில் பணிக்கு வராத அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்து முதல்வர் நாராயணசாமி இன்று (செப். 9) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தலைமை செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை செயலாளர்கள் அறை, துறைத் தலைவர்கள் அறைகளுக்கு சென்று பார்வையிட்ட அவர் பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மத்திய அரசானது 4-ம் கட்டமாக ஊரடங்கை தளர்த்தியுள்ளனர். இதில் அனைத்து அலுவலகங்களிலும் நூறு சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். கோப்புகளில் தேக்கம் இருக்கக்கூடாது. மக்கள் நலப்பணிகளை அனைத்து துறைகளிலும் வேகமாக செய்ய வேண்டும் என்று நமக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதனடிப்படையில் செப் 1 ஆம் தேதி முதல் முழுமையாக அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, ஒவ்வொரு துறையிலும் நூறு சதவீதம் அரசு பணியாளர்கள் வருகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அமைச்சர்களிடம் கூறினேன். அதன் முதற்கட்டமாக தலைமைச் செயலகத்தில் இன்று அரசு செயலாளர்கள், ஊழியர்கள் எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்பதை நான் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

இதில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 24 செயலாளர்களில் 5 செயலாளர்கள் தங்களுடைய அலுவலகத்தில் இல்லை. 90 சதவீத பணியாளர்கள் வந்துள்ளனர். அனைத்து அரசு அலுவலகங்களிலும் நூறு சதவீத பணியாளர்கள் பணியை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 4 மாதங்களில் அரசு அலுவல்கள் அனைத்தும் தேங்கியிருக்கிறது. வேகமாக அரசு பணியாளர்கள் வேலையை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு பார்வையிட்டு அறிவுரை கூறியுள்ளேன்.

குறிப்பாக செயலாளர்கள் அனைவரும் தங்களுடைய பணியில் முனைப்பாகவும், காலத்தோடும் அலுவலகத்துக்கு வந்தால் தான் மற்ற பணியாளர்கள் வருவார்கள். ஆகவே, தலைமை செயலாளரிடம் அனைத்து பணியாளர்களும் பணிக்கு வருவதை கண்காணிக்கின்ற கடமை பொறுப்பு செயலாளர்களுக்கு உண்டு. துறையின் தலைவர்களுக்கு உண்டு என்றும், அதனை அமைச்சர்கள் மேற்பார்வை செய்வார்கள் என்று தெளிவாக கூறியுள்ளேன்.

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் காலத்தோடு பணிக்கு வரவேண்டும். அவர்கள் தங்களுடைய பணியை செய்ய வேண்டும். யாராவது காலத்தோடு பணிக்கு வரவில்லை என்றால் துறையின் தலைவர் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்முடைய மாநிலத்தில் இப்போது வருவாய் குறைந்துள்ளது. வருவாயை அதிகரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக மார்ச் மாதம் நம்முடைய வருவாய் 30 சதவீதமாகவும், ஏப்ரல், மே மாதத்தில் 40 சதவீதமாகவும், ஜூன், ஜூலை மாதத்தில் 60 சதவீதமாக உள்ளது. நமக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து இப்போது வரை 40 சதவீதத்துக்கும் மேல் வருவாய் குறைந்துள்ளது. அதனை ஈடுசெய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரையில் மாநில அரசின் வருவாய் வணிகவரித்துறை, கலால்துறை, பத்திரப்பதிவு துறை, போக்குவரத்துத் துறை மூலம் வரும் வருவாய் 63 சதவீதம். மற்ற மாநிலங்களில் எல்லாம் 50 சதவீதத்துக்கும் மேல் வருவாய் கிடையாது. இப்போது கரோனா காலத்தில் மக்களுக்கு வேலை இல்லாத இந்நேரத்தில் வரி வருவாயை உயர்த்துவது என்பது அரசுக்கு சிரமமான ஒரு சூழ்நிலையாக இருக்கிறது. ஆகவே தான் மாற்றுவழியில் வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம்.

மத்திய அரசு நம்முடைய மாநிலத்துக்குக் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. குறிப்பாக, ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.700 கோடி கடந்த 5 மாதங்களாக கொடுக்கவில்லை. மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய மானியம் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. மாநில அரசு ரிசர்வ் வங்கி அல்லது வெளி மார்க்கெட்டில் இருந்து கடன் வாங்க வேண்டும். அதை 2022-க்குப் பிறகு 2 அல்லது 3 வருடங்களில் வருவாய் இழப்புக்குப் போடுகின்ற வரியில் இருந்து கட்டிக்கொள்ளலாம். மத்திய அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறி தன்னுடைய கடமையை தட்டிக்கழிக்கிறது.

மத்திய அரசு புதுச்சேரி மாநிலம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்தும்போது இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்வதாக நமக்கு உறுதி அளித்துள்ளனர். அந்த கடமையில் இருந்து அவர்கள் தவறுகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசின் நிதியில் இருந்து செலவு செய்கிறோம்.

மத்திய அரசு கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது 2,000 பரிசோதனை செய்கிறோம். அதனை 3,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாநிலத்தில் ஒருபுறம் கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், மற்றொரு புறம் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இப்போது மத்திய அரசு பல வரிகளை குறைப்போம் என்று கூறுகின்றனர். மத்திய அரசு வரிகளை குறைக்கும்போது, மாநில அரசு வரிகளை உயர்த்துவது சிரமமானதாக இருக்கிறது.

பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வந்த பிறகு அது தொடர்பான முடிவு எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்த வேலைகளை பார்த்து வருகின்றனர். புதுச்சேரியை பொருத்தவரையில் இப்போது ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர். ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x